ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த வாரத்தில் இருந்து கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தத்கல் மற்றும் இ-டிக்கெட் மூலம் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் பிப்ரவரி 15-ம் தேதியில் இருந்து ஏசி-3 டயர், ஏசி-2 டயர், முதல் வகுப்பு ஏசி, ஏசி சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளுக்கான இணையதளம் மற்றும் கணினி மயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு திட்டத்தின் கீழ் பெறப்படும் டிக்கெட்டுகளை வைத்திருப்போர் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் அளித்த அடையாள அட்டை, மாணவர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் வங்கிகள் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய கிரடிட் கார்டுகள் உள்ளிட்டவைகளை அடையாள அட்டைக்காக பயன்படுத்தலாம் என வடக்கு ரயில்வே அதிகாரி நீரஜ் சர்மா தெரிவித்தார்.
அதிகாரிகள் சோதிக்கும்போது அவ்வாறு அடையாள அட்டை இல்லாதவர்கள் டிக்கெட் வாங்காதவர்கள் என்று கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.