உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்
ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்
இந்தியாவிலேயே முதல் முறையாக தேவாலய ஆயர் பணிக்கு அரவாணி என்று அழைக்கப்படும் திருநங்கையை நியமனம் செய்வதற்கு தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) சென்னை பேராயம் முடிவு செய்துள்ளது.
இறைப்பணியில் பல்வேறு அதிரடி முடிவுகளை தென்னிந்திய திருச்சபை எடுத்து வருகிறது. தேவாலயங்களில் ஆயர் பணிக்கு பெண்களை தென்னிந்திய திருச்சபை நியமித்தது.
தேவாலயங்களில் உள்ள பீடங்களில் முன்பு ஆண் ஆயர்கள் மட்டுமே ஏறி, திருச்சபை மக்களுக்கு பிரசங்கம் செய்து வந்தனர். தற்போது தமிழகத்தில் உள்ள பல தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான தேவால யங்களில் பெண் ஆயர்களும் பீடங்களில் ஏறி இறை போதனை செய்கின்றனர்.
சி.எஸ்.ஐ.யின் சென்னைப் பேராயத்தின் மூலம் ஏழைகள், சிறுவர், இளைஞர், வயதானவர்கள் மத்தியில் பல்வேறு போதகர்கள் மூலம் இறைப்பணி செய்து வருகிறது. இந்த இறைப்பணி மூலம் ஆண், பெண் அனைவருமே பயனடைகின்றனர்.
ஆனால் திருநங்கைகளுக்கென்று (அரவாணிகள்) எந்த இறைப்பணியும் செய்யப்படவில்லை என்பதை பேராயர் தேவசகாயம் உணர்ந்தார். அவர்களையும் இறை வழிக்குள் நடத்த வேண்டும் என்பதற்காக, திருநங்கைகள் மத்தியில் இறைப்பணியை செய்ய ஆயர்களையும், போதகர்களையும் அனுப்பினார்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளன்நகர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் ஆயராக உள்ள கிறிஸ்டோபர் ரத்தினசாமி, திருநங் கைகளுக்கான இறை போதனையையும், அவர்களை மேம்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்.
திருநங்கைகளின் உணர்வுகளை நன்றாக அறிந்து அவர்களை இறை வழியில் நடத்திச்செல்வதற்கு அரவாணிகள்தான் மிகச்சரியாக இருப்பார்கள் என்பதால், சி.எஸ்.ஐ. திருச்சபையின் தேவாலயத்தில், திருநங்கைகளை ஆயராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி திருநங்கை பாரதி (25), ’’நான், தூத்துக்குடி கணேசபுரத்தை சேர்ந்தவள். எனது பெற்றோர் பெயர் பேச்சிமுத்து-பாப்பா. எனக்கு 2 அக்காள், ஒரு தம்பி உள்ளனர். 10-வது வயதில் நான் திருநங்கை என்பதை உறுதி செய்தேன். வீட்டிலிருந்து வெளியேறிய எனக்கு, பல கிறிஸ்தவர்கள் உதவி செய்தனர்.
இ.சி.ஐ. பேராயர் எஸ்றா.சற்குணம் தனது இறையியல் கல்லூரியில் `பேச்சலர் ஆப் தியாலஜி' படிக்க உதவி செய்தார்.
அந்த படிப்பை முடித்ததும், கடந்த ஆண்டு ஜுன் மாதம் என்னை செங்கல்பட்டு நடராஜபுரத்தில் உள்ள இ.சி.ஐ. தேவாலயத்தில் போதகராக நியமித்தார். நான் அந்த திருச்சபை மக்களுக்கு இறைபோதனை செய்து வருகிறேன்.
பாலியல் உறவுகள் தவறு என்பதை நான் சிறுவயதிலிருந்தே அறிந்திருந்ததால், சமுதாயத்தில் அதுபோன்ற தாக்குதல்களிலிருந்து தப்பினேன்.
வீட்டைவிட்டு வெளியே வந்தபிறகு, ஒரு தகுதியோடுதான் இனி வீட்டுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதன்படி 2 மாதத்துக்கு முன்பு வீட்டுக்கு சென்று பெற்றோரை பார்த்தேன். என்னை அன்பாக அவர்கள் உபசரித்தனர். அவர்களுடன் ஒருநாள் பொழுதை கழித்தேன்.
திருநங்கைகள் தவறான பாதைக்கு செல்வதை தவிர்த்துவிட்டு, ஒரு கவுரவமான நிலையை எட்ட முடியும் என்பதற்கு நான் முன்உதாரணமாக இருக்க விரும்புகிறேன். நான் அணியும் வெள்ளை அங்கி, அது திருநங்கைகள் மத்தியில் நிச்சயமாக எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்’’என்று கூறியுள்ளார்.