சசிகலா உறவினர் ராவணனை பிப்.16 வரை காவலில் வைக்க சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக கூறி, திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்தார் என்பது ராவணன் மீதான புகார் ஆகும்.
ஏற்கனவே ஒரு மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராவணனை, மணல் குவாரி புகாரில் கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 02.02.2012 அன்று சென்னை அழைத்து வந்தனர். 03.02.2012 காலையில் சென்னை ஆலந்தூர் முதலாவது நீதிதுறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராவணனை, பிப்.16 வரை காவலில் வைக்க நீதிபதி பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். பிப்.16 வரை காவலில் வைக்க உத்தரவையடுத்து, ராவணன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து ராவணனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராவணன் வழக்கறிஞர் பா.மோகன், கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இன்று ராவணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ததப்பட்டார். அவரை ஆஜர் செய்யும்போது, அவரது சார்பில் ரிமாண்ட் செய்வதற்கான அடிப்படை எதுவும் இல்லை என்று சொல்லி, விடுதலை செய்வதற்கான மனு போட்டோம். நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாங்கள் அதன் மீது வாதம் செய்ய முடியவில்லை. நீதிமன்றத்தில் அவரை போலீஸ் காவலில் எடுப்பதற்காக, அரசு தரப்பிலே மனு தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுவை விசாரிப்பதற்காக வருகிற 6ஆம் தேதி அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் போலீஸ் காவலில் எடுக்கக் கூடாது என்று வாதம் செய்வோம் என்றார்.படம்: ஸ்டாலின்