ஐ.சி.சி. தலைவரின் அதிகாரத்தை குறைக்க முடிவு! புதியதாக ஐ.சி.சி. சேர்மன் பதவி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாக குழுவின் 2 நாள் கூட்டம் துபாயில் நடந்தது. இதில் சில முக்கியமான பரிந்துரை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி ஐ.சி.சி. தலைவரின் அதிகாரம் குறைக்கப்பட்டு, அந்த பதவி இரண்டாக பிரிக்கப்படுகிறது. அதாவது புதியதாக ஐ.சி.சி. சேர்மன் என்ற பதவி உருவாக்கப்படுகிறது. 2014 ம் ஆண்டு முதல் ஐ.சி.சி.யின் தலைவர் ராஜ தூதர்' போன்று இருப்பார். திருத்தப்பட்ட பரிந்துரைகளின் படி சேர்மன் தான் 2014 ம் ஆண்டு முதல் அதிகாரத்துக்குரிய ஐ.சி.சி.யின் தலைமை பொறுப்பை கவனிப்பார்.
வழக்கமாக ஐ.சி.சி. துணைத்தலைவர் தான் அடுத்த புதிய தலைவராக பொறுப்பு ஏற்பார். புதிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளதால் துணைத்தலைவரின் நிலை குறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. இது குறித்து ஏப்ரல் மாதம் நடக்கும் அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதன் பிறகு ஜுன் மாதம் நடைபெறும் ஆண்டு பொதுக்குழுக்கூட்டத்தில் இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்க சமர்ப்பிக்கப்படும்.
ஐ.சி.சி.யின் தற்போதைய தலைவராக சரத்பவார் உள்ளார். அவரது பதவி காலம் ஜுன் மாதத்துடன் முடிவடைகிறது. அதன் பிறகு துணைத்தலைவர் ஆலன் இசாக் புதிய தலைவராக 2014 ம் ஆண்டு வரை இருப்பார். அதன் பிறகு இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.
இந்த கூட்டத்தில், ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்த பரிந்துரைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.