நீதிபதிகள் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேச்சு
எந்த சூழ்நிலையிலும் நீதிபதிகள் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் சென்னையில் தென்னிந்திய மாநில பார் கவுன்சில் நிர்வாகிகள் மாநாடு-2012 சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியதாவது:-
எல்லா வழக்குகளிலும் நீதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் கோர்ட்டை மக்கள் நாடுகின்றனர். எனவே நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் சட்டத்தின் அடிப்படையிலான கடமை மட்டுமல்ல, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலான கடமையும் அவர்களுக்கு உண்டு.
நீதியின் ஊற்றை லஞ்சக் கறைபடிந்த கரங்கள் அசுத்தமாக்கிவிடும். எந்த சூழ்நிலையிலும் நீதிபதி நேர்மையுடனும், நீதியுடனும் இருக்க வேண்டியது அவசியம்.
கோர்ட்டுகள் அல்லாமல் வேறு முறையில் தீர்வுகளை பெறுவதற்கு மக்கள் மத்தியில் எண்ணம் வந்துவிடக்கூடாது. இது பல்வேறு குற்றங்களை சமுதாயத்தில் ஏற்படுத்திவிடும். எனவே கோர்ட்டுகளை புறக்கணிக்கும் போராட்டங்களை வக்கீல்கள் நடத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.
ஒருமுறை கோவையில் விபத்து இழப்பீட்டு வழக்கு விசாரணையை கவனித்தேன். இழப்பீடு கோரும் வழக்குதாரர்களிடம், இழப்பீட்டுத் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை தன்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற பேச்சுவார்த்தையின்படிதான் வக்கீல்கள் ஆஜராவது தெரிந்தது. இது தொழில் தர்மத்துக்கு எதிரானது. பிறரின் குறைகளை களைவதை நோக்கமாக கொண்டு வக்கீல்கள் செயல்பட வேண்டும். வக்கீல்களின் நேர்மை, தொழில் தர்மம் குறித்தும், வழக்குதாரர்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறை குறித்தும் விதிமுறைகள் வகுக்கப்படுவது அவசியம். இவ்வாறு பேசினார்.