குடித்து விட்டு தினசரி தொல்லை! மகனை கொன்ற தந்தை!
குடித்து விட்டு தினசரி தொல்லை கொடுத்ததால், என்னை பாதுகாத்து கொள்ள மகனை அடித்ததில், அவர் இறந்தார் என்று தந்தை பச்சியண்ணன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
சேலம் அருகே கருப்பூரைச்சேர்ந்தவர் பச்சியண்ணன். (வயது 60). விவசாயி. இவருடைய மகன் ராதாகிருஷ்ணன் (40). இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், முத்துக்குமார் என்ற மகனும், தனிஷ்கா என்ற மகளும் உள்ளனர்.
ராதாகிருஷ்ணன் குடிப்பழக்கம் உடையவர். தினசரி குடித்து விட்டு, மனைவி ராஜேஸ்வரியை திட்டுவார். வழக்கம்போல, கடந்த 26.07.2012 அன்று இரவு ராதாகிருஷ்ணன் குடித்து விட்டு, மனைவியை திட்டினார். அப்போது பச்சியண்ணன் தட்டிக்கேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் தந்தையை உருட்டை கட்டையால் அடித்தார். அப்போது பச்சியண்ணன் திருப்பி அடித்ததில் மகன் ராதாகிருஷ்ணன் இறந்து விட்டார். இது தொடர்பாக பச்சியண்ணனை ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் பச்சியண்ணனிடம் மேட்டூர் பகுதி போலீஸ் துணைசூப்பிரண்டு கோபால், தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், முல்லைக்கொடி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
போலீசாரிடம் பச்சியண்ணன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் ராதாகிருஷ்ணனுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தினசரி அண்டா மற்றும் பொருட்களை எடுத்து அடமானம் வைத்து குடித்து விட்டு, மருமகள் ராஜேஸ்வரியை திட்டுவது வழக்கம்.
கடந்த 26.07.2012 அன்று இரவு குடித்து விட்டு வந்த என் மகன், என் மருமகளை திட்டினான். இதனால் அவனை தட்டிக்கேட்டேன். அப்போது அவன் என்னை பதிலுக்கு உருட்டு கட்டையால் தலையில் அடித்தான். என்னை பாதுகாத்துக்கொள்ள அந்த கட்டையை பிடுங்கி, அவனை நான் பலமாக தாக்கியதில் மயங்கி விழுந்து அவன் இறந்து விட்டான். பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினேன். அதற்குள் என்னை போலீசார் கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.