ஏர் இந்தியா: பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பு
கடும் நிதி நெருக்கடி, விமானிகளின் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இடையிலும், ஏர் இந்தியா, சென்ற ஜூன் மாதம் கூடுதலாக, 3 சதவீதம் பயணிகளுக்கு விமான சேவை வழங்கியுள்ளது.
இது குறித்து, இந்நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊதிய உயர்வு கோரி விமானிகள் கடந்த, 55 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையிலும், நிறுவனம், சென்ற ஜூன் மாதம் 20ம் தேதி வரை, 7 லட்சத்து 16 ஆயிரம் பயணிகளை கையாண்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் கையாளப்பட்டதை விட, 3 சதவீதம் அதிகமாகும்.
மேலும், நிறுவனம் ஜூன் 1 முதல் 22ம் தேதி வரை 609 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 582 கோடி ரூபாயாக இருந்தது.இது, நிறுவனத்தின் மீது பயணிகள் கொண்டுள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. 85 90 சதவீத விமானங்கள், குறித்த காலத்தில் இயக்கப்படுகின்றன.ஏர் இந்தியா நிறுவனம், விமானிகளின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு முன்பாக, சென்ற ஏப்ரல் மாதம் அதன் செலவினங்களை 62.08 சதவீதம் குறைத்து 80 கோடி ரூபாயாக நிலை நிறுத்தியது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 211 கோடி ரூபாயாக இருந்தது. அதே சமயம் இதே காலத்தில் எரிபொருள் விலை 16 சதவீதம் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நிறுவனம், நடப்பு வாரத்தில் ஹாங்காங்கிற்கு விமான சேவையை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.