சினிமா உதவி இயக்குனர் வெட்டிக்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் செல்லத்துரை (வயது42). திருமணம் ஆகவில்லை. அதே கிராமத்தில் வீடு எடுத்து தனியாக தங்கி இருந்தார். இவர் தனது பெயரை விஷ்ணு பிரசாத் என்று மாற்றிக் கொண்டு சென்னையில் ஒரு சில சினிமா இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.
மேலும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகி டி.வி. சீரியல் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். இதுதவிர இவர் அறந்தாங்கி பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்த பணிகளுக்காக செல்லத்துரை அடிக்கடி சென்னை, மதுரை, கோவை போன்ற ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.
செல்லத்துரைக்கு அவரது தந்தை வெள்ளைச்சாமி குடும்ப சொத்தின் ஒரு பகுதியை கொடுத்துள்ளார். மேலும் சில சொத்துக்களை செல்லத்துரை தனது தந்தையை ஏமாற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை மகனுக்கிடையே பிரச்சினை இருந்து வந்தது.
இதேபோல நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, செல்லத்துரை தனது தந்தையை அடித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி வெள்ளைச்சாமி தனது மற்றொரு மகனான ரமேஷிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அன்று இரவு செல்லத்துரை வீட்டில் அரிவாளால் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தார். முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. விரலின் ஒருபகுதி துண்டிக்கப்பட்டு வீட்டு வாசலில் கிடந்தது. செல்லத்துரை அணிந்திருந்த நகைகளும் மாயமாகியுள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். செல்லத்துரைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செல்லத்துரை வீட்டில் உள்ள மெத்தையில் மல்லிகைப்பூக்கள் சிதறிக்கிடந்தன. மேலும் அருகே இருந்த மேஜை டிராயரில் ஆணுறை பாக்கெட்டுகளும், மேஜை மீது பாலியல் தொடர்பான புத்தகங்களும் கிடந்தன.
இதனால் வீட்டில் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, செல்லத்துரை பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பெண்கள் தொடர்பான பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.