தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு
கோவையில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பார்க்கை திறந்து வைக்க முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை கோவை செல்கிறார். அன்று மாலை வ.உ.சி. மைதானத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேடை அமைக்கும் பணியும் மும்முரமாக நடக்கிறது. தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறும் வ.உ.சி. மைதானத்தில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் நாளை கோவை வருகிறார்கள். மேலும் மைதானம் தற்போதே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேடைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் போடப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் வாகனங்களில் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் பட்சத்தில் கோவையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். குறிப்பாக அவினாசி சாலையில் அதிக அளவில் நெரிசல் ஏற்படும். கூட்டத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் புதிய வியூகம் வகுத்து வருகிறார்கள். அதற்கான ஆலோசனை கூட்டம் கமிஷனர் சைலேந்திரபாபு தலைமையில் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கோவையில் போக்குவரத்து மாற்றம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.