ஏ.டி.எம். எந்திரம் எரிந்து 3 லட்சம் ரூபாய் நாசம்
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கவுசல்புரி பகுதியில் பேங்க் ஆப் பரோடா வங்கி ஏ.டி.எம். எந்திரம் நிறுவி இருந்தது. திடீரென அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் தீ பிடித்தது. ஏ.டி.எம். காவலாளி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எந்திரம் முழுவதும் பற்றி எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர். அதற்குள் ஏ.டி.எம். எந்திரம் முழுமையாக எரிந்து போனது. அந்த ஏ.டி.எம். எந்திரத்துக்குள் புத்தம் புது ரூபாய் நோட்டுக்கள் ரூ.3 லட்சம் அளவுக்கு வைக்கப்பட்டு இருந்தன. அந்த 3 லட்சம் ரூபாயும் எரிந்து சாம்பலானது. ஏ.டி.எம். எந்திரத்தில் தீ எப்படி பிடித்தது என்று தெரியவில்லை. ஏ.டி.எம். எந்திரத்துக்குள் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.