அரசியல் நோக்கத்தோடு என் மீது வழக்கு: பொன்சேகா
அரசியல் நோக்கத்தோடு என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்கு விசாரணை கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தின் முன் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்டார். வன்முறைக்கு பொது மக்களைத் தூண்டியதாக பொன்சேகா மீது தொடரப்பட்ட வழக்கில் அப்போது விசாரணை நடைபெற்றது என்று வழக்கறிஞர் லாதுவஹெத்தி கூறினார்.
இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும். அப்போது 20 சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள். இதில் வழக்கில் பொன்சேகா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
பொன்சேகா மீது ஏற்கெனவே ராணுவ நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ராணுவப் பணியிலிருந்து இருந்து கொண்டு அரசுக்கு எதிரான சதியில் ஈடுபட்டார் என்று ஒரு வழக்கும், தனது மருமகனின் நிறுவனத்துக்கு ராணுவ ஒப்பந்தத்தை வழங்கினார் என்று மற்றொரு வழக்கும் உள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், பொன்சேகா கைது செய்யப்பட்டார். இப்போது ராணுவ சிறையில் வைக்கப்பட்டுள்ள பொன்சேகா, இந்த வழக்குகள் எல்லாம் அரசியல் நோக்கத்தோடு தொடுக்கப்பட்டவை என்று கூறியுள்ளார்.