தோல்வியை ஒப்புக்கொண்ட காங்.: மோடி
குஜராத்தில் கடந்த 2005 ம் ஆண்டு ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை வைத்திருந்ததாக சொராபுதீன் என்பவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது போலி என்கவுண்டர் என புகார் எழுந்ததால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான அமித் ஷா கைது செய்யப்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, உள்துறை பொறுப்பை நரேந்திர மோடி ஏற்றார். அமித் ஷா கைதுக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும் மோடி இதுவரை எதுவும் கூறாமல் இருந்தார். இந்நிலையில், நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான மணிநகர் தொகுதியில் புதிய மேம்பாலம் திறப்பு விழா நேற்று நடந்தது.
முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன்சிங் செகாவத் பெயரிலான அந்த பாலத்தை நரேந்திர மோடி திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர் கூறியதாவது:
வளர்ச்சியடைந்த மாநிலமாக குஜராத் விளங்குகிறது. வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எனவே, அரசியலுக்கு சி.பி.ஐ. அமைப்பை பயன் படுத்தும் முயற்சி வெற்றி பெறாது. குஜராத் மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவங்களைப் பார்க்கும் போது, குஜராத்தில் தனது தோல்வியை காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டு விட்டது என்பது தெளிவாகிறது.
சி.பி.ஐ. அமைப்பை காங்கிரஸ் கட்சி கையாளும் விதத்தைப் பார்த்தால், வருகிற தேர்தலில் சி.பி.ஐ. அதிகாரிகளையே தனது வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சி நிறுத்துவது போல தெரிகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக, குஜராத்தின் எந்தவொரு பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகவே இல்லை. குஜராத் மாநிலம் முழுவதும் அமைதியாக இருக்கிறது. ஆனால், குஜராத்தில் நிலவும் அமைதியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். குஜராத் மக்களின் சக்தியை குறைவாக எடை போட்டு விட வேண்டாம்.
வளர்ச்சிக்கான அவர்களுடைய முயற்சிகளுக்கு இடைழூறு செய்பவர்களை அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வளர்ச்சி
ப் பணிகள் மூலமாக அமைதியை நிலைநாட்ட நாங்கள் விரும்புகிறோம். வளர்ச்சிக்கான பாதையில் தடைகளை உருவாக்கும் சக்திகளை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் உள்ள சிறப்பு உரிமைகளை பறிக்கும் சதிச் செயலில் காங்கிரஸ் அரசு இறங்கியுள்ளது. மதம் மாறியவர்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகைகளை அளிக்கும் கொள்கையை கொண்டு வருவதன் மூலமாக, அவர்களை உதாசீனப் படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த கொள்கையால், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்து ஏற்படும் என்றார்.