4 வருடத்தில் 48 ஆயிரம் கோடி முதலீடு: கனிமொழி
4 வருட திமுக ஆட்சியில் 48 ஆயிரம் கோடி முதலீட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளன என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
கலைஞர் பிறந்தநாளையொட்டி கனிமொழி எம்பி வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறார். வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்தவர்களுக்காக திருச்சியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது. திருச்சியில் இன்று நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக வந்த கனிமொழி எம்பி நக்கீரன் இணையதள செய்தியாளரிடம் பேசுகையில்,
கலைஞர் பிறந்தநாளையொட்டி திமுகவினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று நினைத்தோம். அதாவது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேற்றும் விதமாக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறோம். திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்போகிறோம் என்று அறிவித்தவுடன் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 500 கம்பெனிகள் கலந்து கொண்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன. ஆகவே இந்த வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவரும் 5 கம்பெனிகளில் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்றவுடன் 4 வருடத்தில் 48 ஆயிரம் கோடியில் பல்வேறு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக இளைஞர்கள் வெளிமாநிலத்திற்கு போய் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது.
இன்று நடக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில், எப்படி நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது, தனியார் நிறுவனங்கள் இளைஞர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களை அந்தந்த கம்பெனிகள் மூலமாகவே இளைஞர்கள் நேரடியாக தெரிந்துகொள்ளலாம் என்றார்.