இந்தியா கொடுத்த குண்டுகளைத்தான் ஈழத்தமிழர்கள் மீது வீசுகிறார்கள் : விஜயகாந்த் பேட்டி
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திருமங்கலம் இடைத்தேர்தலில் தனது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
நடிகர்கள் அரசியலில் நுழைவதை கண்டிக்கிறாரே ஜெயலலிதா?
ஜெயலலிதாவின் அரசியல் குரு எம்.ஜி.ஆர். ஒரு நடிகரும் கூட.அதைப்போலவே என்.டி.ராமராவ் கூட நடிகராய் இருந்து அரசியலுக்கு வந்தவர்.
ஜெயலலிதா எங்களை விமர்சிப்பது நன்மைக்கே. இது எங்கள் கட்சி வளர்ந்ததையே காட்டுகிறது. அவர்கள் குறைகூறும் போதுதான் நான் எனது கட்சியை முனனேற்றிக்காட்ட வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுகிறது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் இன்று நிலைமை மாறி மும்முனை போட்டியாக உருவாகியுள்ளது.
இப்பொழுது 35 சதவீதம் பேர் களத்தில் புது வாக்காளர்களாக இருக்கிறார்கள். நான் எனது கட்சியை 3-வது அணியாக நினைக்கவில்லை. நான் மக்களால் முதல் கட்சியை சேர்ந்தவனாகவே விரும்பப்படுகிறேன். நான் மக்களின் முதல் விருப்பத்தின் தேர்வாகவே இருக்கிறேன்.
நீங்க ஆட்சிக்கு வந்தால்..?
ஆட்சிக்கு வந்த ஓராண்டில் மாற்றங்களையும் தீர்வுகளையும் செய்வோம். இது ஒன்றும் மந்திரக்கோலைக் கொண்டு செய்யும் காரியம் அல்ல. மக்கள் மீதே எனது கவனம் இருக்கும்.
2011 தமிழ்நாட்டின் மாற்றத்தின் ஆண்டாக இருக்கும். அப்போது நான் மாற்றத்தை உண்டு பண்ணுவேன்.
ஈழப்பிரச்சனையில் உங்க மனநிலைப்பாடு என்ன?
இலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை ராணுவத்தினரால் போடப்படும் குண்டுகள் இந்தியாவில் தயாரித்தது. இது வேதனையானது.
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கு ராணுவத்தீர்வு அல்லாமல் அரசியல் தீர்வே அமைய வேண்டும்.