Skip to main content

அடுத்த தேர்தலில் நீங்கள் ஒரு நல்ல கட்சிக்கு வாக்களிக்கலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் 

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

மதுரையில் சற்று முன்பு தனது கட்சியின் பெயரான 'மக்கள் நீதி மய்யம்' என்பதை அறிவித்து கொடியேற்றி வைத்தார் கமல். அதைத் தொடர்ந்து மாநில பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். விழாவில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கமலையும் தமிழக மக்களையும் வாழ்த்திப் பேசினார்...   

 

Aravinth Kejriwal at Kamal party inaugration



"தமிழகத்துக்கு ஒரு புதிய மாற்றம் ஏற்படும் தருணத்தில் இங்கு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.  நான் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன். ஆனால், இன்று நான் இங்கு இருப்பதற்கு காரணம் அதுவல்ல, அவர் நிஜ நாயகன் என்பதே. அவர் நேர்மையானவர், தைரியமானவர். இந்த தேசத்தின் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்கும் கமலின் தைரியம் எனக்குப் பிடித்தது. நான் அவரையும் அவரது அணியையும் வாழ்த்துகிறேன். அதற்கு முன் தமிழக மக்களை வாழ்த்துகிறேன். உங்களுக்கு ஒரு நேர்மையான,   நல்ல மாற்று கிடைத்திருக்கிறது. 

தமிழகத்தில் முக்கியமாக இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன, இரண்டும்  ஊழல்  கட்சிகள். இப்பொழுது உங்களுக்கு பெரிய வாய்ப்பு. அடுத்த தேர்தலில் நீங்கள் ஊழலில்லாத கட்சிக்கு வாக்களிக்கலாம். டெல்லியில் நாங்கள் ஒரு சிறிய கட்சி தொடங்கினோம். தொடங்கிய ஒரு ஆண்டிலேயே எழுபதுக்கு அறுபத்து ஏழு  இடங்களில் எங்களுக்கு வெற்றியை பரிசளித்தார்கள் டெல்லி மக்கள். காங்கிரசையும் பாஜகவையும் தூக்கி எறிந்தார்கள். தமிழக மக்கள் டெல்லி மக்களின் சாதனையை முறியடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

 

Aravinth at Makkal Needhi Maiam



டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு நேர்மையான அரசை நடத்துகிறோம். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், நேர்மையான அரசு இருந்தால் எதுவும் சாத்தியமே, எல்லாம் சாத்தியமே. இப்பொழுது டெல்லி அனைத்து துறைகளிலும் ஒரு முழுமையான மாற்றத்தை  கண்டுகொண்டிருக்கிறது. உங்களது உற்சாகத்தை பார்க்கையில் தமிழகமும் சீக்கிரம் மாற்றம் காணப்போகிறது என்பதை உணர்கிறேன்.

தமிழக மக்களே, உங்களுக்கு ஊழல் வேண்டுமென்றால், திமுக, அதிமுகவிற்கு வாக்களியுங்கள். உங்களுக்குப் பள்ளிகள் வேண்டுமென்றால் கமலுக்கு வாக்களியுங்கள். உங்களுக்கு ஊழல் வேண்டுமென்றால், திமுக, அதிமுகவிற்கு வாக்களியுங்கள், மருத்துவம், மின்சாரம் வேண்டுமென்றால் கமலுக்கு வாக்களியுங்கள். 

டெல்லி மக்கள் ஒரு புதிய பாதையை அமைத்தார்கள். இப்பொழுது உங்கள் முறை, தமிழகத்தில் ஒரு நேர்மையான அரசை அமைக்க உங்களுக்கான வாய்ப்பு. டெல்லி மக்கள் சாதனையை முறியடியுங்கள். வணக்கம்!!!"             

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார விவரம் வெளியீடு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Kamal Haasan election campaign details release

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏபரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.