Skip to main content

தண்ணீர்... தண்ணீர்… நாளை வரும் உலகப்போர்!

Published on 22/03/2018 | Edited on 22/03/2018
watter

 

இந்தியாவில் தண்ணீரை அரசாங்கமே விற்கத் தொடங்கியது தமிழகத்தில் தான். தற்போது வேறு சில மாநில அரசுகள் விற்பனை செய்கின்றன. இன்னும் 10 ஆண்டுகளில் உலகில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது போல அதிக விலைக்கு தண்ணீரையும் விற்பனை செய்யும் காலம் வரும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இதனை 30 ஆண்டுக்கு முன்னர், 'தண்ணீர் தண்ணீர்' என்கிற பெயரில் இயக்குநர் பாலச்சந்தர் படம் எடுத்து மக்கள் தண்ணீருக்காக படும் அவலங்களை காட்சிப்படுத்தியிருந்தார். அந்தக் காலகட்டத்தில் இருந்ததை விட இப்போது தண்ணீருக்காக மக்கள் படும் துன்பம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. தமிழகம் பரவாயில்லை என்ற நிலை தான். கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களான குஜராத், மகாராஷ்ட்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் ஒரு குடம் குடிநீருக்காக தினமும் 10 கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவல நிலை தொடர்ந்தபடிதான் உள்ளது.

 

ஒரு மனிதனுக்கு அன்றாட தண்ணீர் தேவை 140 லிட்டர். ஆனால் இந்தியாவில் கிடைப்பதோ வெறும் 27 லிட்டர் தான். தென்னாப்பிரிக்கா, அரபு நாடுகளில் இது கூடக் கிடைப்பதில்லை என்பது வேதனையானது. உலகில் சில நாடுகளில் பெட்ரோல், டீசலை விட குடிதண்ணீரின் விலை அதிகம்.

 

உலகில் தென் ஆப்ரிக்காவிலுள்ள கேப்டவுன் நகரத்தை தண்ணீர் இல்லாத நகரமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த நிலை உலகின் பல நாடுகளுக்கும் விரைவில் வரும் என எச்சரிப்பதோடு, உலக நாடுகளுக்குள் மூன்றாவது உலகப்போர் மூளும் என்றால் அது தண்ணீருக்காக தான் என்கிறார்கள் வல்லுநர்கள்.

 

water scarcity

 

உலகம் 70 சதவிதம் நீராக உள்ளது. அதில் 97.5 சதவிதம் கடல் நீர். மீதியுள்ள 2.5 சதவித நீரே நல்ல நீராக உள்ளது. அதில் 0.3 சதவித நீரையே மக்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ளது. மக்கள் பயன்படுத்தும் அந்த 0.3 நீரில் வெறும் 5 சதவிகிதமே சுத்தமானது, மீதி 95 சதவிகிதம் சுகாதாரமற்றது என்கிறது உலக சுகாதார நிறுவனம். தொழிற்சாலைகளின் கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளன. அதோடு புகை மாசுக்கள் ஓசோன் மண்டலத்தை பாதித்துள்ளன. இதனால் பொழியும் மழையும் நச்சாகவே உள்ளது. அதோடு, பொழியும் மழை நீரை பாதுகாப்பதில்லை உலகின் பெரும்பாலான நாடுகள். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு  மக்களிடம் நீர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிஞர்கள் குரல் கொடுத்து வந்தனர். 

 

1992ல் உலக சுற்றுச்சூழல் மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி மார்ச் 22ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவித்துள்ளது. 1993 முதல் உலக நாடுகள் உலக தண்ணீர் தினத்தை கடைப்பிடிக்கின்றன. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், குடிநீரை வீணாக்ககூடாது, விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்துக்கு மாற வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தண்ணீர் தேவை, சிக்கனம், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தற்போது உலகில் பல நாடுகளில் இளைஞர்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கங்களும் நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஓரளவு ஈடுப்படத் தொடங்கியிருக்கின்றன என்பது ஆறுதலென்றாலும் இது காலம் கடந்த செயலே...     

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.