Skip to main content

திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்? 

Published on 17/03/2018 | Edited on 17/03/2018

1962 தேர்தல் முடிந்து புதிய சட்டமன்றம் அமைந்தவுடன் மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அண்ணா வெற்றிபெற்றார்.

இந்தியா மீது சீனா போர் தொடங்க தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. திமுகவோ திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

 

anna


திராவிடநாடு கோரிக்கை குறித்து மக்களவையில் பேசிய பிரதமர் நேரு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். திமுகவை பிரிவினைவாத கட்சி என்றும், அந்தக் கோரிக்கையை ஒடுக்க ஒரு யுத்தத்தை வேண்டுமானாலும் நடத்தத் தயார் என்றும் ஆவேசமாக பேசியிருந்தார்.

அவருடைய அந்தப் பேச்சின் விவரத்தை பெற்ற அண்ணா, மாநிலங்களவையில் நேருவுக்கு பதில் அளித்து பேசினார்.

“இதனால் ஒரு போரே என்றாலும் அந்தப் போர் வரட்டும் என்று நேரு கூறியிருக்கிறார். இது மிகவும் அவசரமான, தெளிவற்ற பேச்சாகும், இத்தகைய கொடூரமான திசையில் நேருவின் சிந்தனை ஏன் திரும்பியது என்று தெரியவில்லை. இதுதான் கடைசி வார்த்தை. இதோடு இந்த விவகாரம் முடிந்துவிடும் என்று நேரு கருதுகிறாரா?

இந்தப் போர் முரசங்களைக் கேட்டு திமுக ஏமாந்துவிடாது. போர் என்பதே தேவையற்ற, அறவே வேண்டப்படாத இடத்தில் போரைப் பற்றி பேசுகிறார் நேரு. ஆனால், வெளிநாட்டுப் படை முற்றுகையிட்டு முன்னேறும்போது, சமாதானவாதியாக காட்சி அளிக்கிறார். எல்லாவற்றையும் தாமே செய்ய வேண்டும் என்ற சக்திக்கு மீறிய வகையில் முயல்வதால் ஏற்படும் குழப்பம் மிக்க சிந்தனையின் அறிகுறியே இது”

அண்ணாவின் இந்த தெளிவான பேச்சு, நேருவின் பேச்சை கிழித்தெறிந்தது. நேரு அதிர்ச்சியடைந்தார்.

 

Nehru as PM


இந்திய எல்லைப் பகுதியில் சீனா ராணுவம் யுத்தத்தை தொடங்கியது.

இந்தியா சீனா இடையிலான எல்லை சிக்கலை காரணம் காட்டி இப்போர் நடந்தாலும், வேறு சில காரணங்களும் இருந்தன. 1959ல் திபெத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை தொடர்ந்து சீன அதிகாரத்தை ஏற்க தலாய் லாமா மறுத்தார். அவருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. இது சீனாவுக்கு கடுப்பேற்றியது.

1962 அக்டோபர் 20ல் சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து தாக்குதலை நடத்தியது. சீன படைகள் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னேறி பல பகுதிகளை கைப்பற்றினர். மேற்கு பகுதியில் சுசுல் பள்ளத்தாக்கிலுள்ள ரிசாங் லா கணவாயை கைப்பற்றினார்கள். மேலும் கிழக்கு பகுதியில் தாவாங் என்ற இடத்தையும் கைப்பற்றினார்கள். எனினும் சர்வதேச தலையீடுகள் காரணமாக 1962, நவம்பர் 20ல் சீனா போர்நிறுத்தம் அறிவித்தது. போர் முடிவுக்கு வந்தது. சிக்கலுக்குரிய கைப்பற்றிய பகுதிகளில் இருந்து சீனா பழைய நிலைக்கு திரும்பியது.

இந்தப் போர் சமயத்தில்தான் திமுக மத்திய அரசுக்கு ஆதரவாக தனது நிலையை அறிவித்தது. நாட்டுக்கு ஒரு ஆபத்து எனும்போது கட்சி வேறுபாடுகளை மறந்து கைகோர்ப்போம் என்றும், பிரிவினைக் கோரிக்கையை கைவிடுவதாகவும் அண்ணா அறிவித்தார். அதேசமயம் பிரிவினை கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருப்பதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

ராணுவ வீரர்களுக்கு ஏராளமான ரத்தம் தேவைப்படும் என்றும், திமுகவினர் ரத்ததானம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். யுத்தநிதி வசூலித்து முதல்வர் காமரஜரிடம் கொடுக்கச் செய்தார்.

பிரிவினை கோரும் கட்சிகளைத் தடைசெய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டதால்தான் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டதாக விமர்சனம் எழுந்தது. அதாவது, இந்தியா மீது அன்னிய நாடு போர் தொடுப்பதை எதிர்த்து இந்திய அரசுடன் இணைந்து போராட முன்வந்த திமுகவின் நல்ல முடிவையும் சிலர் கொச்சைப்படுத்தினர்.

அதைப்பற்றியெல்லாம் அண்ணா கவலைப்படவில்லை. திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலேயே அவர் உறுதியான முடிவை எடுத்தார்.

இந்தியா மீது சீனா போர்தொடுத்த சமயத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒருபிரிவினர் சீனா ஆதரவு நிலைப்பாடை எடுத்தனர். இன்னொரு பகுதியினர் சோவியத் ஆதரவு நிலைப்பாடை எடுத்தனர்.

 

ems namboodhiripad

ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
 

இந்தியா மீது சீனா போர்தொடுத்த அதேசமயத்தில்தான், கியூபாவுக்கு சோவியத் யூனியன் ஏவுகணை வழங்கியது தொடர்பாக அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

சீனா ஆதரவு, சோவியத் ஆதரவு என்ற இரு குழுக்களாக பிரிந்த கம்யூனிஸ்ட்டுகள் கட்சிக்குள் தொடர் விவாதங்களில் ஈடுபட்டனர். சீன ஆதரவு நிலையை எடுத்த நூற்றுக்கணக்கான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கம்யூனிஸ்ட்டுகள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.

சோவியத் ஆதரவு நிலை எடுத்த தலைவர்கள் காங்கிரஸ் அரசின் ஆதரவோடு கட்சியில் அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகவே 1964 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரிகள் என்றும் வலதுசாரிகள் என்றும் இரண்டாக பிளவுபட்டது.

டாங்கே தலைமையிலான வலதுசாரிகள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அவர்களை எதிர்த்து 32 முக்கிய தலைவர்கள் வெளியேறி தனியாக மாநாடு நடத்தினர். ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்களுக்கு தலைமை வகித்தார்.

1964 அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற இடதுசாரிகளின் மாநாட்டில் தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள கட்சியின் பெயரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று பிரகடனம் செய்தனர்.


  

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.