Skip to main content

இப்படியெல்லாம் வேலைபார்த்தீங்கனா... ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... அதிர்ச்சியில் சீனியர்கள்!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

அதிக பரபரப்பு இல்லை. ஆனால், அழுத்தமான சில முடிவுகளுடன் நடந்து முடிந்திருக்கிறது தி.மு.க. பொதுக்குழு! இதில் பேசிய கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், "மீண்டும் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்'' என்று சொல்லியிருப்பது சீனியர்கள் உள்ளிட்ட பலருக்கும் கிலியைத் தந்திருக்கிறது. அறிவாலயத்திற்கு வெளியே முதன்முதலாக கட்சியின் பொதுக்குழுவை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். கலைஞர் நினைவிடம் சென்று விட்டு அப்படியே பொதுக்குழுவிற்கு ஸ்டாலின் வருவது போல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நேராக பொதுக்குழு அரங்கத்துக்கு வந்தார் ஸ்டாலின்.

 

dmk



காலை 10 மணிக்கு பொதுக்குழு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 9.45க்கெல்லாம் ஸ்டாலின் மேடைக்கு வந்துவிட்டதால் 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே கூட்டம் துவங்கியது. பொதுக்குழு கூட்டத்தை மாநாடு போல ஏற்பாடு செய்திருந்தார் எம்.எல்.ஏ.வும் மா.செ.வுமான ஜெ.அன்பழகன். அண்ணா மற்றும் கலைஞரின் உருவப்படங்களுக்கு ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதை அடுத்து, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனையடுத்து, மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 20 தீர்மானங்களை வாசித்தார் பொன்.முத்துராமலிங்கம். கட்சியின் வரவு-செலவு திட்ட அறிக்கையை குழந்தைவேலும், கட்சியின் சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை வழக்கறிஞர் வில்சனும் வாசித்தனர்.
 

dmk



இதற்கிடையே, இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி வருகிற 26-ந்தேதி நாடாளுமன்றத்தில் விழா எடுக்கப்படுவதால், அரசியலமைப்புச் சட்டத்தில் தேவைப்படும் மாநில சுயாட்சி தொடர்பான சில திருத்தங்களை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை கொண்டு வந்தார் ஸ்டாலின். இவை அனைத்துக்கும் ஒப்புதல் தந்தது பொதுக்குழு. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலிவுற்று இருப்பதால், அவரிடமிருக்கும் அதிகாரத்தை தலைவர் ஸ்டாலினுக்கு மாற்றுவது, கட்சியின் உறுப்பினர்களாக திருநங்கைகளை சேர்ப்பது, கட்சியில் மீண்டும் கிளைக்கழகத்தை உருவாக்குவது உள்ளிட்ட சட்டத்திருத்தங்கள் பொதுக்குழுவில் முக்கியமாக கவனிக்கப்பட்டன.
 

dmk



பொதுக்குழுவில் துணைப்பொதுச் செயலாளர்கள், கொள்கைப்பரப்பு செயலாளர்கள், அணிகளின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பேச வாய்ப்பளிக்கப்படும். ஆனால், இந்த முறை, 10 பேர் அளவிற்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டு மதியம் 1 மணிக்கெல்லாம் பொதுக்குழுவை நிறைவு செய்தார் ஸ்டாலின். பொதுக்குழுவில் பேசியவர்கள் கோஷ்டி அரசியல், மா.செ.க்களின் புறக்கணிப்பு, மரியாதை இல்லாதது, மா.செ.க்கள் மீது குற்றச்சாட்டு, அ.தி.மு.க.வுடன் ரகசிய உடன்பாடு என ஏகப்பட்ட மனக் குமுறல்களை வெளிப்படுத்தினர். இருப்பினும் பொதுக்குழுவுக்கே உரிய அழுத்தமான பிரச்சனைகள், இடைத் தேர்தலில் மோசமாக தோல்வியடைந்திருக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான விவாதங்கள், கட்சியின் தற்போதைய நிலைகுறித்த விமர்சனங்கள், மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்களை எதிர்கொள்ளும் வலிமையான யுக்திகள் என எதுவும் அவர்களிடமிருந்தோ பொருளாளர் துரைமுருகனிடமிருந்தோ எதிரொலிக்கவில்லை.

எல்லாருடைய எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யக்கூடியதாக இருந்தது, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சுதான். "நான் கலைஞர் அல்ல' என, கட்சித்தலைவராகப் பொறுப்பேற்றபோது பேசியதைக் குறிப்பிட்ட ஸ்டாலின், "என் சக்திக்கு முடிந்தளவுக்கு உழைத்தேன். என் சக்தியை மீறியும் உழைத்தேன்; உழைப்பேன்; உழைத்துக்கொண்டிருப்பேன். ஏற்கனவே 89 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தோம். இப்போது 100 உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம். இது தனிப்பட்ட என்னுடைய சாதனை அல்ல. இந்த சாதனை உங்களைச் சேரும். உங்களை உருவாக்கிய தொண்டர்களைச் சேரும்.

நாடாளுமன்றத்தில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றவர்கள் மட்டும் 24 பேர். நாடாளுமன்றத்தில் 3-வது இடத்தில் இருக்கிறோம். இது தொண்டர்களின் உழைப்புக்கு கிடைத்த சாதனை. இங்கு பேசிய 10 பேரும் குறிப்பிட்டு சில பிரச்சனைகளைச் சொன்னார்கள். அந்த பிரச்சனைகளில் 90 சதவீதம் நாங்கள் அறிந்தவைகள்தான். ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகளை அழைத்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். அதன்பேரில் சில நடவடிக்கைகளை எடுத்தோம். இங்கு சொல்லப்பட்டிருக்கும் பிரச்சனைகள் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.


செயல்தலைவராக நான் இருந்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தியபோது, சர்வாதிகாரியாக நான் மாறப்போகிறேன் என சொன்னேன். அது வெறும் பேச்சுக்காக அல்ல. கட்சியின் வளர்ச்சிக்காக நாளடைவில் சர்வாதிகாரியாக நிச்சயம் மாறுவேன். நீங்கள் முன்வைத்துள்ள உண்மையான விமர்சனங்களை சம்பந்தப்பட்ட வர்கள் ஏற்று திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவார்கள். தொண்டர்கள்தான் கழகம். தொண் டர்களை அரவணைத்துச்செல்லுங்கள். அவர்களின் ஆலோசனைகளை கேளுங்கள். அவர்களோடு சில நிமிடங்களாவது செலவிடுங்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் கட்சி பணியாற்றாமல் அனைத்து நாட்களில் கட்சி வேலைகளை பார்க்கவேண்டும். அப்படி திட்டமிட்டு பணியாற்றினால் நம்மை வீழ்த்த எவனாலும் முடியாது.

அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் கட்சியின் சட்டத்திருத்தத்தில், ஊராட்சிக் கழகங்களை கிளைக்கழகங்களாக மாற்றும் திருத்தத்தை செய்திருக்கிறோம். இதுவரை 12,500 ஊராட்சி கழகங்களாக இருந்தது இனி 99,420 கிளைக்கழகங்களாக மாறப்போகிறது. அதன் மூலம் 99,420 கிளைக்கழக செயலாளர்கள் வரப்போகிறார்கள். அப்படி வருபவர்கள் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்ற வேண்டும். அதுதான் கட்சிக்கு வலிமையை சேர்க்கும். நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை பெருமையாக சொல்லிக்கொள்கிற போது, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்களில் தோல்வியடைந்திருக்கிறோம். ஆளும் கட்சி பணம் செலவளித்தது, அமைச்சர்கள் முகாமிட்டு அரசு அதிகாரத்தை பயன்படுத்தினார்கள் என நாம் சொல்லலாம். ஆனா, 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தி.மு.க.வை நோக்கி மக்கள் வரவேண்டுமெனில் நாம் மக்களை நோக்கிச் செல்ல வேண்டும். நமது வெற்றியை தடுப்பதற்கு மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசும் சதித் திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறது. கடுமையான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். சாதாரணமாக நாம் ஜெயிக்க அவர்கள் விடமாட்டார்கள்.


கட்சியில் கோஷ்டிகள் இருக்கும். அது கட்சிக்கு வலுச் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர பலகீனமாக்குவதாக இருக்கக் கூடாது. கூட்டம் நடத்துவதில், பிரச்சாரம் செய்வதில், உறுப்பினர்களை சேர்ப்பதில் போட்டிகள் இருக்க வேண்டும். ஒற்றுமையோடு திட்டமிட்டு உழைக்க வேண்டும். நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்து நடக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் இப்போதைவிட ஆளும் கட்சி அதிகமாகத்தான் செலவு செய்யப்போகிறார்கள். அந்த பணத்தை வெற்றிகொள்ளக்கூடிய திறமை நம் ஒற்றுமையிலும் உழைப்பிலும்தான் இருக்கிறது.

1991-96 ஜெயலலிதா ஆட்சியை விட மிக மோசமான கொள்ளைக்கும்பலிடம் இன்றைய ஆட்சி இருக்கிறது. அதை பிரச்சாரம் செய்யாமல் மக்கள் தானாக வந்து வாக்களித்துவிட மாட் டார்கள். கலைஞரின் ஆட்சியை அமைக்க இந்த பொதுக் குழு தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும். இனி வரப்போகிற காலம் நமக்கு சவாலான காலமாகத்தான் இருக்கப்போகிறது. அந்த சவாலை சமாளிக்க தயாராக வேண்டும். கோட்டையை விட்டு கொள்ளைக் கும்பலை விரட்டியடிப்பதுதான் இந்த பொதுக்குழு மூலம் நாம் எடுக்க வேண்டிய சூளுரை'' என்றார் மிக அழுத்தமாக.

ஸ்டாலினின் இந்த பேச்சு பொதுக்குழு உறுப்பினர்களிடம் சூடேற்றியிருந்தது. பொதுக்குழுவுக்கு முதல்நாள் துரைமுருகன், ஜெ.அன்பழகன் சகிதம் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்த ஸ்டாலின், நாற்காலி அமைப்பு, பேசும் முறை உள்பட சில ஒத்திகைகளைப் பார்த்திருக்கிறார். மேடையில் 14 இருக்கைகள் போடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. குறிப்பாக, இளைஞரணியின் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதற்கு பிறகு நடக்கும் பொதுக்குழு என்பதால் அவரை மேடையில் உட்கார வைக்க முடிவு செய்திருந்தனர்.

அவரை மட்டும் அமர்த்தினால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகும் என நினைத்து மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி உட்பட சில முக்கிய அணிகளின் செயலாளர்களையும் உட்கார வைக்கலாம் என்கிற அளவில் ஆலோசனை நடத்தியபோதுதான் 14 இருக்கைகள் போட வேண்டிய சூழல் எழுந்தது. அதற்கேற்ப மேடை யில் இருக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என ஒத்திகை பார்த்தார் ஸ்டாலின். உதயநிதியை மேடையில் ஏற்ற வேண்டுமென்பது சித்தரஞ்சன் சாலையின் விருப்பம். சீனியர்கள் மத்தியில் இது புகைச்சலை ஏற்படுத்தியது. தொண்டர்களிடமும் மீடியாக்களிடமும் இது எப்படி பார்க்கப்படும் என்பதை எடுத்துச் சொல்லினர். இதனால் 14 நாற்காலிகள் என்பது 9 நாற்காலிகளாக சுருங்கியதுடன், உதயநிதிக்கு பந்தலில் 7-வது வரிசையில் இடமளித்தனர்.

இந்த பொதுக்குழுவில் இளம்பெண்கள் பேரவையை துவக்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக பெண் பிரபலங்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டுமிருந்தனர். பொதுக்குழுவில், அதற்கான தீர்மானம் நிறைவேற்றவும் முடிவு செய்திருந்தனர். ஏற்கனவே கனிமொழியிடம் பேசி ஒப்புதலையும் பெற்றிருந்தார் ஸ்டாலின். அது குறித்து கனிமொழியிடம் சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் விவாதித்தபோது, "இது தேவையா' என மறுதலித்த கனிமொழி, ஒரு கட்டத்தில் "அண்ணனுக்கு எது விருப்பமோ அதை செய்யுங்கள். நான் தடையாக இருக்க மாட்டேன்' என ஒப்புதல் தந்திருந்தார்.

இந்த நிலையில், என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றலாம் என ஒரு நாள் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் சீனியர்களிடம் ஸ்டாலின் விவாதித்தபோது, இளம்பெண்கள் பேரவை துவக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது சீனியர்கள் சிலர், "இளைஞரணியின் கட்டுப்பாட்டில் இளம் பெண்கள் பேரவை செயல்படுகிறபோது தேவையற்ற பிரச்சனைகள் வரலாம். விரும்பத்தகாத பிரச்சனைகளை கொண்டு வரும். அது உதயநிதிக்கும் ஒட்டுமொத்த இளைஞரணிக்கும் சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கும்' என்கிற ரீதியில் சொல்ல, பிரச்சனைகளை உணர்ந்த ஸ்டாலின், இளம் பெண்கள் பேரவை துவக்குவதை தள்ளி வைத்ததனால் அது குறித்த தீர்மானம் வரவில்லை. கனிமொழி தலைமையிலான மகளிரணியை டம்மியாக்க நினைத்தவர்களுக்கு உள்ளூர வருத்தம்.

அதேபோல, பேராசிரியர் செயல்பட முடியாமலிருப்பதால் பொதுச்செயலாளர் பொறுப்பு என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதில் ஒருவரை நியமிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அதற்கு சீனியர்களோ, "கலைஞர் இருக்கும்போது இப்படி ஒரு விவாதம் நடந்தது. அப்போது, எந்த சூழலிலும் பதவியில் இருக்கும் சீனியர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்கள் வகிக்கும் பதவிக்கு பொறுப்பு என ஒருவரை நியமிக்கக் கூடாது' என கலைஞர் திட்டவட்டமாக சொல்லியதை நினைவுபடுத்த பொறுப்பு என்பதும் கைவிடப்பட்டது. அதன்பிறகுதான், பொதுச்செயலாளர் அதிகாரத்தை தலைவருக்கு மாற்றியமைக்கும்படி கட்சியின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.
 

 

பொதுக்குழுவுக்கு முந்தைய நாட்களில் இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கும் நிலையில், "சர்வாதிகாரியாக மாறுவேன்' என ஆரம்பித்து பல எச்சரிக்கைகளை ஸ்டாலின் எதிரொலித்ததை உற்றுக் கவனித்த தொண்டர்கள், "எதையெல்லாம் எதிர்பார்த்தோமோ அதையெல்லாம் தலைவர் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் செய்வாரா? கட்சி நலனுக்காக உண்மையாகவே சர்வாதிகாரி ஆவாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்தளவுக்கு தி.மு.க.வுக்குள் செய்ய வேண்டிய செயல்கள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஏராளம் உள்ளன'' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.


 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.