Skip to main content

மோடியின் வீர வசனத்தில் ஒளிந்திருக்கும் நடுக்கம்!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

மோடியும் பாஜகவும் பேசுகிற வீர வசனங்களில், வடிவேலு பேசும் "பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்" என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
 

modi

 

மைனாரிட்டி அரசாக பொறுப்பேற்ற நரசிம்மராவ் அரசு பதவிக்காலம் முடியும்போது பெரும்பான்மை பெற்றிருந்தது. ஆனால், நரேந்திரமோடி அரசு தனிப்பெரும்பான்மையுடன் பொறுப்பேற்று பதவிக்காலம் நிறைவடைய ஒருஆண்டு இருக்கும் நிலையிலேயே பெரும்பான்மை இழந்து நிற்கிறது. இந்திய அரசியலில் இது ஒரு வித்தியாசமான வரலாற்று நிகழ்வு என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இத்தனைக்கும், இந்தியாவின் முதன்மை அமைச்சராக மோடியை முன்னிறுத்துவதற்காக, மூன்று ஆண்டுகள் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து அம்பானியும், அதானியும் கார்பரேட்டுகளுடன் இணைந்து ஒரு பிம்பத்தை கட்டமைத்தார்கள்.

10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பெரியண்ணன் மனப்பான்மையை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்த நேரம். 2ஜி விவகாரம், ஈழப்பிரச்சனை உள்ளிட்டவற்றில் கூட்டணிக் கட்சியான திமுகவை சிக்கலில் சிக்கவைத்து வேடிக்கை பார்த்தது.


 

anna hazare

 

கார்பரேட்டுகளின் உதவியோடு, அன்னா ஹஸாரே போன்ற திடீர் ஊழல் எதிர்ப்பு போராளிகள் லோக்பாலுக்காக போராட்டம் நடத்தினார்கள். அவரோடு, பதஞ்சலி ராம்தேவ், கெஜ்ரிவால், கிரண்பேடி போன்றவர்களும் போராடினார்கள் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

(காங்கிரஸ் கொண்டுவந்த லோக்பால் மசோதாவை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதும் அதைப்பற்றி அன்னா ஹஸாரேவும் மற்றவர்களும் கண்டுகொள்ளவில்லை என்பதும் வேறுவிஷயம்.)

அப்படிப்பட்ட அரசு எதிர்ப்பு சூழ்நிலையில், முக்கியமான மாநிலக் கட்சிகளின் கூட்டணியோடு போட்டியிட்ட பாஜக எதிர்பாராத விதமாக 282 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. கூட்டணிக் கட்சிகளையும் இணைத்தே அமைச்சரவை பதவியேற்றது.


 

tdp, ysr


இப்போது, மோடியின் தன்னிச்சையான போக்கு, பாஜகவின் பெரியண்ணன் மனப்பான்மை, தென் மாநிலங்களை புறக்கணிக்கும் போக்கிற்கு எதிராக தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றன.

பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலே இருந்து அந்தக் கட்சி தனது இமேஜை காப்பாற்றுவதற்காக பலவிதமான தந்திரங்களை கையாளுகிறது. குறிப்பாக தனது தோல்விகளை மறைக்க மாநில ஆளுநர்களைப் பயன்படுத்தி, சில மாநில கூட்டணி அரசுகளில் இடம்பெறுவது அதில் ஒன்று.

பாஜக சந்தித்த இடைத்தேர்தல்களின் முடிவுகளையும், மாநில சட்டமன்ற தேர்தல்களில் அந்தக் கட்சி கையாண்ட தந்திரங்களையும் கவனித்தால் இந்த உண்மை புரியும்.

மோடி பதவியேற்ற 100 நாட்களிலேயே இடைத்தேர்தல் தோல்விகள் தொடங்கிவிட்டன. அந்தத் தோல்விகளை மூடி மறைக்க காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவதை ஊதித் தப்பிப்பது பாஜக கடைப்பிடிக்கும் இரண்டாவது வழி.


 

modi


இந்தியாவில் பாஜக 21 மாநிலங்களை ஆட்சி செய்வதுபோல பாஜக தலைவர்கள் பெருமை அடிக்கிறார்கள். அது உண்மையா என்றால் இல்லை.

பாஜக தனித்து ஆட்சி செய்வது சில மாநிலங்களில்தான். குஜராத், சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாஜக தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது.

நாகாலாந்து, கோவா, அருணாச்சல பிரதேசம், அசாம், ஹிமாச்சலப்பிரதேசம், ஜார்கண்ட், மகாராஸ்டிரா, மணிப்பூர், பிகார், ஜம்மு காஷ்மீர், மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பெரிய கட்சியாகவோ, சிறிய கட்சியாகவோ கூட்டணி ஆட்சியில் பங்கேற்கிறது.

இந்த உண்மையை மறைத்து, ஆட்சிப் பொறுப்பேற்ற போது இருந்த 282 இடங்களில் 9 இடங்களை இடைத்தேர்தலில் இழந்து 273 இடங்களை மட்டுமே வைத்திருக்கும் பரிதாபமான நிலையை மறைத்து பாஜக தலைவர்கள் வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், இந்நிலையில்தான், உ.பி., பிகாரில் நடைபெற்ற 3 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இவற்றில் கோரக்பூர், புல்பூர் தொகுதிகள் முதல்வர் யோகி, துணை முதல்வர் மவுரியா ஆகியோர் வெற்றிபெற்ற தொகுதிகள் ஆகும். பிகாரில் அராரியா தொகுதியில் லாலுவின் ஆர்.ஜே.டி. வெற்றிபெற்றதன் மூலம் பாஜகவுடன் நிதிஷ்குமார் அமைத்த கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


 

modi

 

2019 தேர்தலில் மீண்டும் மோடிதான் ஜெயிப்பார் என்று பாஜக கூறிவரும் நிலையில், இந்தத் தோல்விகள் அந்தக் கட்சியை இடிபோல தாக்கியிருக்கிறது. அதாவது, தற்போதைய நிலையில் மக்களவையில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடத்தைக் காட்டிலும் ஒரு இடம் குறைவாகவே வைத்திருக்கிறது.

பாஜகவின் இந்த நிலையையும், அந்தக் கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையையும் புரிந்துகொண்ட தெலுங்குதேசம், பாஜகவுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் தங்களுக்காக போராடும் நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பவன் கல்யாணை பாஜக கொம்பு சீவியது.

“தமிழ்நாட்டில் அதிமுகவை ஆட்டிப் படைப்பதைப் போல எங்களை ஆட்டிப் படைக்க முடியாது. வரியை வாரிக் கொடுப்பது தென்மாநிலங்கள். ஆனால், வாழ்வது வட மாநிலங்களா?” என்று காட்டமாக கேட்டார் நாயுடு.

அந்தக் கட்சியின் எம்.பி. முரளிமோகன், தெற்கில் உள்ள மாநிலங்களை மத்திய அரசு புறக்கணித்தால், தென்னிந்தியா தனிநாடாகும் என்று எச்சரித்தார்.


 

chandrababu naidu

 

இத்தகைய பரபரப்பான நிலையில் பாஜக கூட்டணியில் இருந்தே தெலுங்குதேசம் விலகுவதாக நாயுடு அறிவித்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவற்றுடன் இணைந்து மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்குதேசம் முடிவெடுத்துள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெறுமா என்பதைத் தாண்டி, இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் கட்சிகளை அறிந்துகொள்ளகூடிய வாய்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைக்கும். மோடி தலைமையிலான அரசு மைனாரிட்டி அரசு என்பது வெளிப்படும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

ஆனால், தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுவதை தடுக்கவே பாஜக அதிமுகவின் தயவை நாடியிருக்கும் அவலம் அம்பலமாகி இருக்கிறது.

அதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி அமளியில் ஈடுபடுவதைப்போல அதிமுக நாடகம் நடத்துகிறது. அதையே காரணம் காட்டி அவையை ஒத்திவைத்து பாஜக நாடகம் ஆடி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கே அனுமதி மறுக்கிறது

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.