Skip to main content

நெருக்கடியை சமாளிக்க அமைச்சரின் குடும்ப பிரச்சாரம்!

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

ddd

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பரபரப்பான தொகுதி, அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியான விராலிமலை. தொகுதி உருவாக்கப்பட்டது முதல் 2 முறையும் இவரே சட்டமன்ற உறுப்பினர். மீண்டும் நம் தொகுதி இதுதான் என்பதைக் கருத்தில் கொண்டு, ஒரு மாவட்டத்திற்குத் தேவையான அத்தனை அரசு அலுவலகங்களையும் கொண்டுவந்து, தொகுதி மக்கள் ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த கஜா புயல், கொரோனா ஊரடங்கு கால நிவாரணம், பொங்கல் சீர் என அனைத்து வீடுகளுக்கும் 6 முறை தனது ‘சி.வி.பி. பேரவை' மூலம் ஒரு குடும்பத்திற்கு தலா ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்கி, "இன்னும் தருவேன்” என்று சொல்லியிருந்தார். 3 மாதங்களுக்கு முன்பே மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளையும் அழைத்து ஜாதி, மதவாரியாக பிரித்து தேர்தல் பணிகளை வீடு வீடாக செய்து உறுப்பினர்களின் கணக்கெடுப்பும், செல்ஃபோன் எண்கள் வரை வாங்கியும் வைத்திருக்கிறார்.

 

இத்தனை பணிகள் செய்த பிறகும், தனது விராலிமலை தொகுதிக்கு நெவளிநாதன் என்பவர் விருப்பமனு கொடுத்ததில் அதிர்ச்சியடைந்தார் விஜயபாஸ்கர். அதுபோல, தி.மு.க. வேட்பாளராக தென்னலூர் பழனியப்பனை அறிவித்ததும் அமைச்சருக்கு ஷாக்தான். பழனியப்பனுக்கு சீட் தராமல், வேறு யாருக்காவது சீட் தர வைக்க வேண்டும் என தி.மு.க.வில் உள்ள தனக்கு வேண்டியவர்கள் மூலம் அமைச்சர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அ.தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்கள் முத்தரையர் சங்கத்தினரைக் களத்தில் இறக்கி, வாக்குப் பிரிப்பு பணியிலும் இறங்கியுள்ளனர்.

 

அதனால் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக்கிவிட்டார் அமைச்சர். தன் மகள் பிரியதர்ஷினியை அவர் பேச வைப்பது வாக்காளர்களைக் கவர்கிறது. முத்தரையர் சமூகத்தினரை சரிசெய்ய அமைச்சர் முனைப்பாக இருக்கும் நிலையில், ஆலங்குடியில் பல தேர்தல்களாக காத்திருக்கும் பலருக்கும் சீட்டு கொடுக்காமல், 50 நாளைக்கு முன்னால் கட்சிக்கு வந்த தர்ம.தங்கவேலுக்கு சீட்டு கொடுத்ததால், ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த ர.ர.க்கள் இணைந்து வழக்கறிஞர் நெவளிநாதனை பொது வேட்பாளராக விராலிமலையில் நிறுத்தவும் முடிவுசெய்து, அமைச்சரிடமும் சொல்லிவிட்டனர். இதனால் நொந்து மனச்சங்கடத்துடன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில்... அடுத்து தனது மனைவியையும் வீடு வீடாகச் சென்று பெண்களைச் சந்திக்க அனுப்பத் தயாராகியுள்ளார்.

 

இந்தமுறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நான்கு பக்கமும் நெருக்கடி அதிகரித்துள்ளது. "அனைத்தையும் சமாளிப்போம்” என்கிறார்கள் ர.ர.க்கள்.