Skip to main content

தாமரை தமிழகத்தில் கண்டிப்பாக மலரும்.... அதனால்தான் திமுகவினரும் தற்போது வேல் எடுத்துள்ளனர் - நடிகர் ராதாரவி பேச்சு!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

gh

 

சென்னையில் கராத்தே தியாகராஜன் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். வழக்கமான முறையில் பேசிய அவர், திமுகவை கடுமையாக சாடினார். அவர் பேசியது வருமாறு, "நீண்டநாட்களாக பாஜகவில் சேருமாறு அண்ணன் பொன்னார் அவர்கள் தொடர்ந்து என்னை அழைத்து வந்தார். நானும் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தேன். ஒரு கட்டத்தில் நானே பாஜகவில் சேர்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பேசுவதற்கு முன்பு இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் திமுக நண்பர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் அங்கே நின்றுகொண்டிருக்கும் அந்த நபர்கள் கடைசியாக வர வேண்டிய இடம் இதுதான். இதை விட்டால் அவர்களுக்கு வேறு வழி கிடையாது. முருகன் அவர்களை பாஜகவிற்கு அழைத்து வருவார். இந்த முருகன் பேரைத்தான் சீமான் தொடர்ந்து உச்சரித்து வருகிறார். அதனால்தான் எங்களுடைய தலைவர் பேரும் கூட முருகன் என்று இருக்கிறது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும், வந்து 10 நிமிடமாவது பேச வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் இரண்டு நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நான் வருகிறேன் என்று சொல்லியும், அண்ணா கண்டிப்பாக வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

 

நான் அவரைப் பற்றி 10 நிமிடத்தில் என்ன பேச முடியும். 10 நிமிடத்தில் பேசக் கூடிய ஆளா அவர். கராத்தே தியாகராஜன் மட்டும் இல்லை என்றால், நான் சட்டமன்ற உறுப்பினரே ஆகி இருக்க முடியாது. அம்மா அவர்கள் இருக்கும்போது நான் தேர்லில் போட்டியிட்டபோது ஒரு குறிப்பிட்ட வார்டில் மா.சுப்பிரமணியன் அவர்கள் பலமாக ஆளுமை செலுத்திக்கொண்டிருந்தார். அம்மா அந்த வார்டை சொல்லி, ‘அந்தப் பகுதியில் உங்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது’ என்று கேட்டார். நான் மா.சுப்பிரமணியன் அங்கு பலமாக இருப்பதாக கூறினேன். அப்படியா என்று கேட்ட அம்மா, உடனடியாக அந்த பகுதிக்குக் கராத்தே தியாகராஜனை அனுப்பி வைத்தார். வேறு யாரும் அம்மா நினைவுக்கு வரவில்லை. உடனடியாக அவரை அந்தப் பகுதியில் தேர்தல் பணியைக் கவனிக்க போட்டார்கள். ஆனால் கராத்தே தியாகராஜனைப் பார்த்து என்னிடம் ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார், ‘இவரிடம் ஜாக்கிரதையாக பழகுங்கள்’ என்று. அவர் எவ்வளவு மோசமோ அதை போல நானும் மோசமானவன். இந்த மோசமும், மோசமும் ஒன்னா சேர்ந்தால்தானே உருப்பட முடியும். அவரைப் பற்றி நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது. அதற்கான காலம் இன்னும் இருக்கிறது. 

 

இன்றைக்கு தாமரை மலராது என்று தொடர்ந்து சிலர் பேசி வருகிறார்கள். தாமரை தமிழகத்தில் நிச்சயம் மலரும். குளத்தில் தண்ணீர் இல்லை என்றால் தாமரை இல்லை என்று அர்த்தம் இல்லை. தண்ணீர் வருகின்றபோது தாமரை மேலே தெரியும். எனவே தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. நமக்கு திமுகவைப் பற்றி பயப்பட தேவையில்லை. நம்முடைய வேலையைப் பாதி திமுக தலைவரே செய்து கொண்டுள்ளார். யானை சாணம் போட்டால் லத்தி என்று சொல்லுவோம், மாடு போட்டால் சாணம் என்று சொல்லுவோம். ஆடு போட்டால் புழுக்கை என்று சொல்லுவோம். சாணி போடுவதிலேயே இவ்வளவு இருக்கிறது. அண்ணா யானை மாதிரி திமுகவை வைத்திருந்தார், ஆனால் தற்போது நிலைமை அப்படியா இருக்கிறது. ஸ்டாலின் சொல்கிறார், ‘நாங்கள் பார்க்காத போலீசா’ என்று, நான் அவருக்குச் சொல்கிறேன், எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அதிகம் பேசினால் அவர்களும் தங்களுடைய வேலைகளைக் காட்டுவார்கள். உங்கள் அப்பாவிடம் போய் இதைப் பற்றி நீங்கள் கேட்க வேண்டும். எங்கள் தலைவர் வேல் எடுத்துக்கொண்டு சென்றதையடுத்து இன்றைக்கு வேலை இல்லாதவன் எல்லாம் வேல் எடுத்துக்கொண்டு மாவட்டம் மாவட்டமாக சுற்றுகிறார்கள். இவர்கள் எப்படி சுற்றினாலும் பாஜக தமிழகத்தில் கால் பதிப்பதைத் தடுக்க முடியாது" என்றார்.