Skip to main content

ஈழத்தில் வைகோவுக்கு சிலை வைப்போம்! - ஈழக் கவிஞர். காசி ஆனந்தன்

Published on 22/05/2018 | Edited on 22/05/2018

இலங்கையில் 2009 மே மாதம் நடந்த இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன்.

"வைகோவைப் பார்த்து இன்றைக்கு சிலர் தெலுங்கர் என்று சொல்லுகிறார்கள். எனக்கு தெரியும் நான் தமிழீழத்தை சேர்ந்தவன், நான் சொல்லுகிறேன். வைகோ தெலுங்கர் என்று சொன்னால் நானும் தெலுங்கர். நான் தமிழன் என்றால் வைகோவும் தமிழன். ஆதித்தனார் அவர்களுடன் நான் இருந்தவன், அவர் என்ன கொள்கை கொண்டு இருந்தார் என்பது எனக்கு தெரியும். ஒரு 1500 ஆண்டுகளுக்கு முன் என்னோடு என்னைப்போல் இருந்த தமிழன் அவன் இடைக்காலத்தில் மாறுகிறான். காலச் சூழலில் தெலுங்கன் ஆகிறான். அவனது நாடும் இனமும் உருவாகிய பிறகு, அவன் இன்னொரு இனம் அவனை மதிக்க வேண்டும். ஆனால் அவன் இன்னொரு தெலுங்கனாக மாறிப் போவானவன். ஆனால் இன்றும் நான் தமிழன்தான் இன்றும் உலகத்தில் நான் தமிழனாகவே வாழ்வேன் என்றால் அவனை விட தமிழன் யாரும் இல்லை என்கிறார் ஆதித்தனார்.
 

kasi aananthan

 

 

 

தமிழ் இன விடுதலை புலி போராட்டத்திற்கு முதல் முறையாக 20 கோடி ரூபாய் தந்தது, முதலும் கடைசியும் அவன்தான். அவன் ஒரு திராவிடன் பெயர் எம்.ஜி.ஆர். அதை மறந்துவிடாதீர்கள். இன்றைக்கு எந்த தமிழன் தந்தான். திராவிடன்தான் தந்தான். இன்றைக்கு  எம்.ஜி.ஆர்.க்கு நாங்கள் யாழ்ப்பாணத்தில் சிலை வைத்திருக்கிறோம். எங்கள் விடுதலைப் புலி போராட்டத்தில் இருவரை இன்றும் தலைவராக காலகாலமாக நாங்கள் கருதிகிறோம். இன்று  எம்.ஜி.ஆர். அவருக்கு நிகராக ஒருவர் பழ. நெடுமாறன் ஒருவர் வைகோ. இன்று இவ்வளவு எதிர்ப்புகளுக்கு நடுவிலும் சிங்கள படைவீரர்களின் போராட்டத்திற்கு நடுவிலும் யாழ்ப்பாணத்தில்  எம்.ஜி.ஆர்.க்கு சிலை இருக்கிறது. நாளை தமிழீழம் அமைகிறபோது மண்ணில் நிலைத்து நிற்கிற சிலை நெடுமாறன் சிலை, வைகோ சிலை. அதை மறந்துவிடாதீர்கள். வைகோவை நீங்கள் கலங்கபடுத்த நினைக்காதீர்கள். எங்களுக்கு என்றும் தமிழகம் துணை இருக்கும். இங்கு  இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்குள்ளும் நெருப்பு இருக்கிறது என்பது எனக்கு தெரியும் ஏனென்றால் உங்களை உருவாக்கியவர் அப்படிப்பட்ட தலைவர்.

 

 

சேகுவேரா தன் நாட்டுக்காக போராடி விட்டு, பக்கத்துக்கு நாட்டுக்கு போனான், போராடினான்.. அதுபோல இது இனப் போராட்டம். இந்த நாட்டு மக்களுக்காக அல்ல, பக்கத்து நாட்டுக்கு போராடுவேன் என்று கடலில் இறங்கி நின்றவர் வைகோ. நான் சேகுவேராவிற்கும் வைகோவைக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை. அவர் கையில் துப்பாக்கி இருந்தது, இவர் கையில் அது இல்லை. அது மட்டும்தான் வேறுபாடு. அந்த மண்ணில் 2706 இந்து கோவில்களில் குண்டுகளை போட்டது சிங்கள அரசு. இந்து மதத்தை பெரியதாக பேசுகிற இந்திய அரசு இதைப் பார்க்க வேண்டாமா?  ஒரு ராமனின் கோவிலை மசூதி ஆக்கிவிட்டான் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடுகிற இந்திய அரசு, 2706 கோவில்களில் குண்டு வெடித்தது அதை பார்த்துக்கொண்டு இருக்கலாமா? அவர்கள் இந்துக்கள் இல்லையா? ஒரு இந்து பெண்ணானா பாஞ்சாலி ஆடையை கலந்ததற்காக பாரதம் நடத்திய இந்தியா, பத்தாயிரம் இந்து பெண்கள் துடிக்க, துடிக்க பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டார்களே அப்போது இலங்கையில் எத்தனை பாரதப் போர்களை இந்தியா நடத்தியிருக்க வேண்டும். இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கையில் மாற்றம் வேண்டும். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். தமிழீழ விடுதலை போர் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த அதே கோலத்தில் விடுதலை புலிகளின் போராக மீண்டும் நடக்கும். அதை உறுதியாக நம்புங்கள்".