Skip to main content

கர்நாடகத்தையும் தமிழகம் போல மாற்றுமா பாஜக?

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

ஒருவழியாக ஜனநாயகப் படுகொலையை நிறைவேற்றிவிட்டது பாஜக. பாஜகவின் முயற்சி வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் பதவிவெறிதான் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 20 எம்எல்ஏக்களை விலைபேசி வாங்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி எப்படி விட்டது என்ற கேள்வி எழுகிறது. அவர்களை பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு பாஜகவிடம் எப்படி பணம் வந்தது என்ற கேள்வியை யாரும் கேட்க மாட்டார்கள்.

 

கூட்டணி என்பது ஒருமித்த மனதுடன் எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைய வேண்டும். ஆனால், மதசார்பற்ற ஜனதா தளத்திலிருந்து பிரிந்து வந்து காங்கிரஸ் முதல்வராகவே பொறுப்பேற்ற சித்தராமையாவின் ஆதரவாளர்களும், பூர்வீகமாகவே காங்கிரஸில் இருந்து பழந்தின்று கொட்டை போட்ட சீனியர்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒட்டவே இல்லை.

 

 

karnataka formula bjp applied in tamilnadu state

 

தனது குடும்பத்தின் நலனுக்காகவே கட்சியை நடத்திய தேவகவுடாவும், குமாரசாமியும் அடித்த கூத்துகள் அந்தக் கட்சியினரையே வெறுப்படையச் செய்தது. சித்தராமையா முதல்வராக வேண்டும் என்று காங்கிரஸுக்குள் உருவான கோஷ்டிகளை அவரே அடக்கி வைக்கவில்லை. அமைச்சர் சிவக்குமாரின் முதல்வர் கனவுக்கு ஆதரவாக அவருடைய ஆதரவாளர்கள் ஒருபக்கம் ஆட்டம் போட்டார்கள்.

 

இதன் விளைவு தான் கர்நாடக ஆட்சிக் கவிழ்ப்பு. ஆனால், இப்போதும் கூட ஒரு 20 எம்எல்ஏக்களை கோடிக்கணக்கான ரூபாய் பணம்கொடுத்து சந்தைச் சரக்கைப்போல விலைக்கு வாங்கி, அவர்களை சுதந்திரமாக நடமாட விடாமல், தனது ஆட்சி நடைபெறும் மும்பையில் போலீஸ் பாதுகாப்புடன் சிறை வைத்திருந்த பாஜக, கர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றி பெற்றதாக கூறுவது கேலிக்கூத்து. பாஜக அப்படிக் கூறுவதையே செய்தியாக்குவது மீடியாக்கள் நடத்தும் கேலிக்கூத்து என்கிறார்கல் அரசியல் விமர்சகர்கள்.

 

சரி ஆட்சி கவிழ்ந்துவிட்டது. இனி கர்நாடகத்தில் என்ன நடக்கும்?

 

நிச்சயமாக, சொந்தக் கட்சியின் கொறடா உத்தரவை மதிக்காத காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வார். அவருடைய உத்தரவை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் செல்வார்கள்.

 

karnataka formula bjp applied in tamilnadu state

 

இந்த வழக்கின் முடிவு பாஜகவின் விருப்பத்தை பொறுத்ததே என்பதற்கு ஏற்கெனவே தமிழகம் சாட்சியாக இருக்கிறது. வழக்கை உடனடியாக முடித்து, 20 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தலை நடத்த பாஜக நிச்சயமாக உடன்படாது. ஏனெனில் அப்படி தேர்தல் நடத்தினால், தனித்துப் போட்டியிட்டு இரண்டு கட்சிகளும் வென்ற அந்த 20 தொகுதிகளிலும் கூட்டணியாக போட்டியிடும் நிலை உருவாகும். அப்படி ஒருவேளை போட்டியிட்டு மீண்டும் 20 தொகுதிகளை கைப்பற்றினாலோ, 15 தொகுதிகளை கைப்பற்றினாலோ பாஜக ஆட்சி கவிழ்வது உறுதி.

 

ஆகவே, நிச்சயமாக தமிழகத்தைப் போல கர்நாடகத்திலும் உடனடியாக தேர்தலை நடத்த பாஜக ஒப்புக்கொள்ளாது. தேர்தல் ஆணையம் பாஜகவின் விருப்பப்படியே இயங்குகிறது என்று ஐஏஎஸ் அதிகாரிகளே ஆதாரங்களோடு நிரூபித்துள்ள நிலையில், நிச்சயமாக 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்தாமலே பாஜக மிச்சமுள்ள ஆண்டுகளை கடத்திவிடும். அதை ஒரு அசிங்கமாகவே பாஜக கருதாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.