Skip to main content

உலகின் மிகச் சிறந்த காதலர்கள் ஜென்னி - மார்க்ஸ்! #காதலர்தின சிறப்புப் பதிவு

Published on 14/02/2018 | Edited on 14/02/2018
Marx

 

கவிஞர்கள் அனைவருக்கும் காதல் அனுபவம் இருந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால், காதல் கொண்ட அனைவரும் கவித்துவ அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

 

“நீ சிறுவனாக என் வீட்டுக்கு வரும்போதே உன்னை எனக்குத் தெரியும்” என்று ஒரு காதலி தன் காதலனிடம் கூறினால் எப்படி இருக்கும்?

 

ஆம், மாமேதை கார்ல் மார்க்ஸிடம் அவருடைய காதலி ஜென்னி இப்படிக் கூறியிருக்கிறாள். மார்க்ஸை விட ஜென்னி நான்கு வயது மூத்தவள்.

 

கார்ல் மார்க்ஸின் குடும்பமும், ஜென்னியின் குடும்பமும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்தனர். குழந்தை பருவத்திலிருந்தே மார்க்ஸை அறிந்தவர் ஜென்னி. அனேகமாய் மார்கஸை குழந்தையாக தூக்கிக் கொஞ்சிக்கூட இருந்திருக்கலாம்.

 

இருவருமே இலக்கியம், தத்துவம் குறித்து விவாதிப்பார்கள். ஜென்னியின் அப்பாகூட மார்க்ஸுடன் நடைப்பயிற்சியின்போது இலக்கியம் தத்துவம் குறித்து விவாதம் செய்திருக்கிறார்.

 

இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து ஜென்னிக்கும் மார்க்ஸுக்கும் 1836 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்தார்கள். அதன்பிறகும் மார்கஸ் படிக்கச் சென்றார்.

 

23 வயதில் மார்க்ஸ் தத்துவ ஞானத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். ஆனால், அதுகுறித்தெல்லாம் அவர் கவுரவப்பட்டுக் கொள்ளவில்லை. அவர் அரசியலில் ஈடுபடவே விரும்பினார்.

 

மார்க்ஸை உதவாக்கரை என்று அவருடைய தாயாரே தீர்மானிக்கிற அளவுக்கு நிலைமை இருந்தது. தனது தந்தை வழியில் கிடைத்த சொத்தை தனது மகனுக்குக் கொடுக்க அவர் மறுத்தார்.

 

ஜென்னியுடன் குடும்பம் நடத்த வருமானம் இல்லாத நிலையில், தனது காதல் நிறைவேறாமல் போய்விடுமோ என்றுகூட மார்க்ஸ் நினைத்தார். ஆனால், அது அவரை முடக்கிவிடவில்லை.

 

ட்ரையர் நகரிலேயே மிக அழகான பெண் என்று மார்க்ஸ் கருதிய ஜென்னியை 1843 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

 

மார்க்ஸின் மூளையை மனிதகுல மேன்மைக்காக மட்டுமே சிந்திக்க அனுமதித்த மிகச்சிறந்த பெண்மணியாக ஜென்னி இருந்தார். கஷ்டங்கள் எதுவும் மார்க்ஸை அணுகாதபடி தன்னையே வேலியாக போட்டிருந்தார் ஜென்னி.

 

மார்க்ஸின் மனைவியாகவும், செயலாளராகவும் ஜென்னி இருந்திருக்காவிட்டால், உலகம் மார்க்ஸின் மேதைமையை அனுபவித்திருக்க முடியாது.

 

7 குழந்தைகளை பெற்ற ஜென்னி, கடைசிக் குழந்தைக்கு மார்பிலிருந்து ரத்தத்தையே கொடுக்க முடிந்தது. லிவர் கேன்சரில் பாதிக்கப்பட்ட ஜென்னி 1881 ஆம் ஆண்டு தனது தோழனைவிட்டு பிரிந்தார். இரண்டு ஆண்டுகள் கூட ஜென்னி இல்லாமல் மார்க்ஸால் வாழ முடியவில்லை.

 

இருவரின் குடும்ப வாழ்க்கை கட்சி வாழ்க்கைக்கும், இருவரின் காதலுக்கும் சாட்சியாக மார்க்ஸ் எழுதிய கடிதம் பதிவாகி இருக்கிறது…

 

ஜென்னி மார்க்ஸ்
 

மார்க்சும் ஜென்னியும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தம்பதிகள் என்பது அவர்களை நன்கறிந்த எல்லோருடைய கருத்தாகும். துன்பங்களோ, சோதனைகளோ அவர்களுடைய காதலை பலவீனப்படுத்தவில்லை. அதற்கு மாறாக, துன்பம் அவர்களுடைய அன்பை வலுப்படுத்தியது. அவர் மாணவப் பருவத்திலிருந்ததைப் போலவே முதிர்ச்சிக் காலத்தின் போதும் ஜென்னியை மென்மையாக, தீவிரமாகக் காதலித்தார்.

 

1856ம் வருடத்தில் ஜென்னி ஜெர்மனிக்குக் குறுகிய காலப் பயணம் சென்றிருந்தாள். அப்பொழுது ஜென்னிக்கு வயது நாற்பத்திரண்டு, பெரிய குடும்பத்தின் தாயாகவும் இருந்தாள். அப்பொழுது மார்க்ஸ் பாசத்துடன் ஜென்னிக்கு எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. அக்கடிதம் மென்மையும் உணர்ச்சியும் இருப்பதுடன் ஆழமான சிந்தனையும் நிறைந்திருக்கிறது. மார்க்சின் ஆளுமைக்கும் காலப் போக்கில் முதுமையடையாத அவருடைய இளமையான காதலுக்கும் அக்கடிதம் அடையாளமாக இருக்கின்றபடியால் அதிலிருந்து நீண்ட மேற்கோளைத் தருவது பொருத்தமே.

 

“என் அன்பிற்கினியவளே.

“நான் மறுபடியும் உனக்கு எழுதுகிறேன், ஏனென்றால் நான் தனியாக இருக்கிறேன், என்மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடிக் கொண்டிப்பதும் எதை நீ அறிந்துகொள்ள முடியாமல் அல்லது கேட்க முடியாமல் அல்லது எனக்குப் பதிலளிக்க முடியாமலிருப்பதும் என்னை வாட்டுகிறது.... எனக்கு முன்னால் நீ இருப்பதைப் பார்க்கிறேன், நான் உன்னை அன்போடு தொடுகிறேன், தலை முதல் கால்வரை உன்னை முத்தமிடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டுப் பணிகிறேன், “அன்பே! உன்னைக் காதலிக்கிறேன்” என்று முணுமுணுக்கிறேன்.

 

ஆம், ஒதேல்லோ நாடகத்தில் வரும் அந்த வெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலிதததைக் காட்டிலும் அதிகமாக நான் உன்னைக் காதலிக்கிறேன். அது உண்மை. போலியான, உளுத்துப்போன உலகம் எல்லா மனிதர்களையும் போலிகளாக, உளுத்துப்போனவர்களாகப் பார்க்கிறது. என்னை அவதூறு செய்பவர்கள், என் முதுகுக்குப் பின்னால் என்னைத் திட்டுபவர்களில் எவராவது இரண்டாந்தரமான நாடக அரங்கில் முதல் தரமான காதலன் பாத்திரத்தை நடிப்பதற்காக என்னை எப்பொழுதாவது குறை கூறியதுண்டா? ஆனால் அது உண்மையே.

 

இந்தப் போக்கிரி களுக்கு நகைச்சுவை இருக்குமானால் அவர்கள் ‘உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை உறவுகளை’ ஒரு பக்கத்திலும், உன் காலடியில் நான் கிடப்பதை மறுபக்கத்திலும் ஓவியமாகத் தீட்டியிருப்பார்கள். இந்தப் படத்தையும் அந்தப் படத்தையும் பாருங்கள் என்று அந்த ஓவியத்துக்குக் கீழே எழுதியிருப்பார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்தனமான போக்கிரிகள், முட்டாள்களாகவே நீடிப்பார்கள்.

 

“.... ஒரு கனவில் என்னை விட்டு நீ போய்விட்டால் கூட காலம் அதற்குச் செய்த சேவை என்பதை நான் உடனடியாக அறிந்து கொள்வேன். சூரிய ஒளியும் மழையும செடி வளர்ச்சியடைவதற்கு உதவி செய்வதைப் போன்றதே இது. நீ என்னைப் பிரிந்த உடனே உன்னிடம் நான் கொண்டிருக்கின்ற காதல் அதன் மெய்யான வடிவத்தை, அதாவது பேருருவத்தை அடைகிறது. அதில் என்னுடைய ஆன்மாவில் முழுச் சக்தியும் என்னுடைய இதயத்தின் முழுப் பண்பும் குவிக்கப்பட்டிருக் கின்றன. நான் மறுபடியும் மனிதனாக உணர்கிறேன். ஏனென்றால் ஒரு மாபெரும் உணர்ச்சியை நான் உணர்கிறேன். நவீனக்கல்வி முறையும் பயிற்சியும் நம்மிடத்தில் ஏற்படுத்துகின்ற பல்வகைத் தன்மையும், அகநிலையான மற்றும் புறநிலையான காட்சிகளை நாம் சந்தேகிக்க உபயோகிக்கின்ற ஐயுறவாதமும் நம் அனைவரையும் சிறியவர்களாக, பலவீனமானவர்களாக சிணுங்குபவர்களாக, மன உறுதி இல்லாதவர்களாகச் செய்ய உத்தேசிக்கப்பட்டவை. ஆனால் காதல்-ஃபாயாபாஹின் “வளர்சிதை மாற்றத்தில்” அல்ல. பாட்டாளி வர்க்கத்தின் மீது அல்ல, ஆனால் அன்பு நிறைந்த பெண்ணிடம், உன்னிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.

 

“அன்பே, நீ சிரிக்கலாம்; நான் திடீரென்று பிரசங்கத்தில் இறங்கிவிட்டது ஏன் என்று கேட்கலாம். ஆனால் உன்னுடைய இனிமை நிறைந்த தூய்மையான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். நான் மௌனமாக இருப்பேன். ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டேன். என் உதடுகளினால் உன்னை முத்தமிட இயலாதபடியால் என்னுடைய நாக்கினால்தான் உன்னை முத்தமிடுவேன், வார்த்தைகளைத்தான் கொட்டுவேன். நான் கவிதை கூட எழுதுவேன் என்பது மெய்யே....

 

jenny

 

“உலகத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் அழகானவர்கள் என்பது உண்மையே, ஆனால் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு சுருக்கத்திலும் என்னுடைய வாழ்க் கையின் மிகவும் சிறந்த, மிகவும் இனிமையான நினைவுகளைத் தூண்டுகின்ற அந்த முகத்தை நான் மறுபடியும் எங்கே காண்பேன்? உன்னுடைய இனிய முகத்தில் என்னுடைய முடிவில்லாத துயரங்களை, ஈடு செய்யப்பட்ட முடியாத இழப்புக்களை (மார்க்சின் மகன் ஏட்கார் இறந்துவிட்டத்தைப் பற்றிய குறிப்பு -ப-ர்) நான் காண்கிறேன்; உன்னுடைய இனிய முகத்தை நான் முத்தமிடுகின்ற பொழுது நான் துயரங்களை முத்தமிட்டு விரட்டுகிறேன். ‘அவளுடைய கரங்களில் புதைந்து, அவளுடைய முத்தங்களில் புத்துயிர் பெற்று’-அதாவது உன்னுடைய கரங்களில், உன்னுடைய முத்தங்களின் மூலம்; நான் பிராமணர்களுக்கும் பிதகோரசுக்கும் மறு பிறவியைப் பற்றி போதிப்பேன், கிறிஸ்துவ சமயத்துக்குத் திருமீட்டெழுச்சியைப் பற்றி அதன் போதனையைத் தருவேன்.”

 

குடும்பத் துன்பங்களின் சுமைகள் எப்படி இருந்தபோதிலும் மார்க்சின் விஞ்ஞான மற்றும் அரசியல் பணியில் ஜென்னி அலுப்படையாமல் உதவி செய்தாள். பல வருட காலம் ஜென்னியே மார்க்சின் காரியதரிசிப் பொறுப்பில் பணியாற்றினாள், அவருடைய நூல்களைப் பிரதியெடுத்தாள், கட்சிப் பணிகளில் அவருடைய “பிஆர்ஓ”வாக இருந்தாள், சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த பல பிரமுகர்களுடன் அவள் கடிதத் தொடர்பு வைத்திருந்தாள்; அந்த இயக்கம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் அவள் அக்கறை காட்டி வந்தாள். அவள் தன்னைக் கட்சியின் ஊழியன் என்று பெருமயாகக் கருதினாள். ஜென்னிலஸ்ஸாலுக்கு எழுதிய கடிதத்தில் நகைச்சுவை மிளிர்கிறது…

 

“அவரசமாக இந்தச் சிறு குறிப்பை எழுதுவதற்காக மன்னியுங்கள். என் தலையில் எவ்வளவோ கிடக்கிறது. செய்ய வேண்டிய கைவேலையும் ஏராளம். மேலும் இன்று நகரத்திற்கும் போக வேண்டும். எனவே இரண்டு அல்லது மூன்று மணி நேரம் சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிப்பேன். நான் கட்சியின் இயங்கும் பகுதியில் இன்னும் இருக்கிறேன். அது முன்னே செல்கின்ற, மைல் கணக்கில் நடக்கின்ற கட்சி, மற்றவை எப்படி இருந்தாலும் நான் நல்ல கட்சிக்காரி அல்லது ஓடிக் கொண்டிருப்பவள், உங்களுக்குப் பிடித்தமானபடி வைத்துக் கொள்ளுங்கள்.”

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.