Skip to main content

சபரிமலை செல்வதற்கு ஆயத்தமாகும் வெளிநாட்டுப் பெண்கள்!

Published on 05/01/2019 | Edited on 05/01/2019

 

ச்ச்

 

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் பலரும், நம் நாட்டு பாரம்பரியம், கலாச்சாரம், ஆன்மிகம் போன்றவற்றை அறிந்துகொள்ளும் நோக்கத்தோடு இந்தியா வருவதாகச் சொல்வதுண்டு. ஆன்மிகம் என்று சொல்லும்போது, கிறிஸ்தவ சமயமும், இஸ்லாம் மார்க்கமும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவியவை. ஆனாலும், வெளிநாட்டினரில் சிலர், இந்தியா வரும்போது, இந்து மதம் குறித்த  ஆன்மிக ஈர்ப்பை வெளிப்படுத்துபவர்களாக உள்ளனர்.  

 

செக் மொழி பேசும் செக் குடியரசானது, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒரு உறுப்பு நாடாகும்.  ‘உண்மைக்கே வெற்றி’ என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அந்நாட்டில், 59 சதவீதம் பேர் சமய நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும், 26.89 சதவீதம் பேர் கத்தோலிக்கர்கள் என்றும் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.  

 

அந்த செக் குடியரசிலிருந்து ஆண்கள் 22 பேர், பெண்கள் 33 பேர் என மொத்தம் 55 பேர் இந்தியா வந்திருக்கின்றனர். இவர்கள்  ஆன்மிக ஈடுபாடு காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வந்தனர். அப்போது, வழிபாட்டுக்குத் தேவையான சாம்பிராணி போன்றவற்றைக் கடைகளில் வாங்கினர். மலையேறும்போது ‘அரோகரா’ கோஷமும் எழுப்பினர். 

 

இதற்குமுன், இந்த செக் குடியரசு நாட்டினர், தஞ்சாவூர், கும்பகோணம், கன்னியாகுமரி போன்ற ஆன்மிகத் தலங்களுக்குச் சென்றுள்ளனர். நவக்கிரகக் கோவில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறனர். தங்களின் முன்னோருக்கு  ராமேஸ்வரத்தில் திதியும் கொடுத்திருக்கின்றனர். இவர்களில் மாலை அணிந்திருக்கும் 42 பேர்,  சபரி மலைக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். அந்த 42 பேரில் பெண்களும் உண்டு. நம் நாட்டுப் பெண்கள் இருவர் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்ததற்கே, கடும் எதிர்ப்பு நிலவிவரும் சூழ்நிலையில், வெளிநாட்டுப் பெண்களும் அங்கு செல்வதற்கு ஆயத்தமாகி வருவது வியப்பளிக்கிறது. 

 

t

 

ஆன்மிகப் பயணமாக இந்தியா வந்திருக்கும் செக் குடியரசு நாட்டினரை வழிநடத்திச் செல்பவராக இருக்கிறார், அவர்களால் ஆன்மிக குரு என்றழைக்கப்படும் தாமஸ் பைப்பர். இவர்தான், இந்தியப் பயணம் குறித்த தகவல்களை ஆர்வத்துடன் விவரித்தார். கடவுள் நம்பிக்கை என்பது, நாடு, பாலினம் கடந்த பொதுவானதாக இருக்கிறது.