Skip to main content

அ.தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடு பா.ஜ.க. அரசுக்கு சாதமாக இருக்கிறது: பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு பேட்டி

Published on 22/03/2018 | Edited on 22/03/2018



 

farmers-suicide



மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி,  2016-ம் ஆண்டு தமிழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை செய்து இருப்பது குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிய உள்ளது குறித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினோம்... 
 

அய்யாக்கண்ணு கூறுகையில், 
 

"விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்கு லாபகரமான விலை இல்லை, பயிரிட நிலத்தடி நீர் இல்லை, அரசு உரிய நீரை பெற்று தராததால் விவசாயி வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. கடனை தள்ளுபடி செய்யவில்லை. வங்கியில் நெருக்கடி தருகிறார்கள். ஆகையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் தமிழக அரசோ குடும்பப் பிரச்சனையில் தற்கொலை என்று சொல்லுகிறது. மத்திய அரசு தமிழக விவசாயிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது என மத்திய அரசு நினைப்பதில்லை. தமிழகம் மிகவும் சீரழிந்து கிடக்கிறது.
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறது. இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். யாரும் தொடரவில்லை என்றால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்" என்றார்.
 

 

ayyakkannu prpodiyan 351.jpg

 

பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், 
 

"தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை குறைத்து காட்டியிருக்கிறார்கள். தமிழக அரசும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைகளை குறைத்து காட்டும் முயற்சிகளை கவுரவுத்துக்காக மேற்கொள்கிறார்கள். உண்மையான பட்டியலை வெளியிட்டு தீர்வு காண முயற்சி எடுப்பதில்லை. எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதால் விவசாயிகள் வளமாக இருப்பதாக நினைக்க முடியாது.
 

தற்போது விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விலைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். நீர் ஆதார பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். மழைநீர் சேமிப்புத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். விவசாயிகளுக்கான சந்தை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில்தான் விவசாயிகளை பாதுகாக்க முடியும்.
 

 

cauvery issue 450.jpg


 


தென் மாநிலங்களை சேர்ந்த அரசுகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு சென்றுள்ளனர். இதனால் தென் மாநிலங்கள் ஒன்றிணைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக இந்தத் தீர்மானத்திற்கு தமிழக அரசு வலுவூட்டி மத்திய அரசை பணிய வைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிய உள்ளதை மத்திய அரசுக்கு கண்டிப்போடு தமிழக அரசு சுட்டிக்காட்ட வேண்டும்.
 

அதிமுக பாராளுமன்றத்தை முடக்குவதை பாஜக அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. தெலுங்கானா எம்பிக்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியக்கூட அதிமுக எம்பிக்கள் அனுமதிக்கவில்லை. அனுமதிக்காமல் தொடர் போராட்டத்தில் அதிமுக எம்பிக்கள் ஈடுபடுவதால் பாஜகவுக்கு இது சாதகமாக இருக்கிறது. தீர்மானத்தை முன்மொழிந்தால் தென் மாநிலங்கள் ஒன்றுபட வாய்ப்பு உள்ளது. மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்படும். அப்போது தமிழகம் பக்கம் அவர்கள் திரும்பி நமது கோரிக்கைக்கு செவி சாய்க்க வாய்ப்பு உள்ளது."
 

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார். 

Next Story

போராட்டத்திற்கு தேதி குறித்த விவசாயிகள்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
 Farmers on the date for the struggle 

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட 12 அம்ச வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்றபோது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து தடுக்கப்பட்டனர்.

இந்த தடுப்புக்கட்டைகளைத் தகர்த்தெரிந்த விவசாயிகள் தடைகளை மீறி டெல்லி நோக்கி புறப்பட்டபோது விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். மேலும் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு பட்டுத் தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயி ஒருவரும் போராட்டக் களத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. அதே சமயம் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவசாயிகள் விரிவான ஆலோசனை செய்து வந்தனர்.

இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், “டெல்லிக்கு பேரணியாக செல்லும் எங்கள் (விவசாயிகள்) திட்டம் அப்படியே உள்ளது. அதிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. எல்லையில் பலத்தை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 6 ஆம் தேதி விவசாயிகள் நாடு முழுவதிலும் இருந்து ரயில், பேருந்து, விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு போராட்டத்தில் கலந்துகொள்ள அரசு அனுமதிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மார்ச் 10 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம். அன்றைய தினம் நன்பகல் 12 மணி முதல் மாலை முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.