Skip to main content

நீலன், நீலி சிற்பங்களுடன் கிரந்தம் எழுத்துகளுடன் கல்வெட்டு மற்றும் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

Discovery of inscription and sculpture with Granth letters

 

மதுரை மாவட்டம், கருவேலம்பட்டி அருகே சுமார் 500 ஆண்டுகள் பழமையான கிரந்த எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மதுரை, திருப்பரங்குன்றம் ஒன்றியம் கருவேலம்பட்டி பகுதியில் சூரிய பிரகாஷ் கொடுத்த தகவலின்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லெட்சுமண மூர்த்தி,  அஸ்வத்தாமன், சுப்பிரமணியன்,  ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு மேற்பரப்பு கள ஆய்வு செய்த போது தனியார் விவசாய நிலத்தில் தனி பாறையில் கிரந்தம் கல்வெட்டும், புடைப்பு சிற்பமும் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தபோது கி.பி. 16ம் நூற்றாண்டைச்  சேர்ந்தவை என்பது தெரியவந்தது.

 

Discovery of inscription and sculpture with Granth letters

 

இது குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியாதவது; கருவேலம்பட்டியில் இருந்து மொச்சிக்குளம் செல்லும் சாலை அருகே தனியார் விவசாய நிலத்தில் தனி பாறையில் 2 அடி அகலம்,  4 அடி நீளம் கொண்ட 4 வரிகளில் கிரந்தம் எழுத்துகளுடன் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்த போது கோபாலகிருஷ்ணன் மகன் என்ற வரியில் தொடங்கி நான்காவது வரியில் தம்மம் என்ற சொல்லில் முடிவு பெறுகிறது.  தம்மம் என்ற சொல் இருப்பாதல் தானம் வழங்கப்பட்டதை அறிய முடிகிறது. இடையில் வெட்டப்பட்ட கல்வெட்டு காலப்போக்கில் மழை, வெயில் போன்றவற்றால் தேய்மானம் ஏற்பட்டு சிதைந்து விட்டதால் தொடர்ச்சியான பொருளை அறிய முடியவில்லை.


சிற்பம்

இக்கல்வெட்டின் இடது புறம்  இருக்கின்ற பாறையில் 2 அடி அகலம்,  3 அடி நீளம் கொண்ட புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் நீண்ட காதுகளுடன்,  கழுத்தில் அணிகலன் அணிந்து கொண்டு ஆணின் சிற்பமும், சரிந்த கொண்டையுடன்,  நீண்ட காதும், கையில் வளையல் அணிந்து கொண்டு சற்று சாய்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் அப்பகுதியில் வாழ்ந்த தலைவன், தலைவிக்காக உருவாக்கப்பட்டு இருக்கலாம். இச்சிற்பம் அதிகமான தேய்மானம் ஏற்பட்டதால் முகம் தெளிவற்று காணப்படுகிறது. இக்கல்வெட்டு மற்றும் சிற்பத்தினை தமிழக தொல்லியல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற இணை இயக்குநர் முனைவர் சொ.சாந்தலிங்கம் ஐயாவின் உதவியுடன் ஆய்வு செய்த போது கி.பி. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறியப்பட்டது. தற்போது மக்கள் நீலன்,  நீலி என்று பெயரில் தெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர் என்றார்.