Skip to main content

வரலாற்றில் மிக மோசமான ஊழல் இது - சமூக செயற்பாட்டாளர் பால்கி குற்றச்சாட்டு

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Balki  interview

 

மத்திய அரசின் ஊழல்கள் குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் பால்கி நம்மோடு உரையாடுகிறார்

 

ஒவ்வொரு துறையிலும் மத்திய அரசு எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள், செய்யப்பட்ட செலவுகள் அவசியமானவையா? இல்லையா? என்று சொல்வதுதான் சிஏஜி அமைப்பின் பணி. சுதந்திரம் கிடைத்த முதல் சில ஆண்டுகளில் சிஏஜி அமைப்பின் செயல்பாடுகள் பெருமளவு வெளியே விவாதத்துக்கு வரவில்லை. நரசிம்மராவ் காலத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பொதுவெளியில் வைத்து விவாதிக்கப்பட்டன. மோடியின் ஆட்சியில் ஏதாவது கேள்வி கேட்டால் அமலாக்கத்துறை வரும் என்று நாடாளுமன்றத்திலேயே பயமுறுத்தும் நிலை தான் இருக்கிறது. 

 

இப்படிப்பட்ட ஒரு நிலையிலும் சிஏஜி தைரியமாக இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது எப்படி என்கிற ஆச்சரியம் ஏற்படுகிறது. இவர்களின் அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி உண்மை இன்னமும் விழித்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் தான் இந்த அறிக்கை. பொதுவாக சிஏஜி அறிக்கையை வைத்து தான் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறும். ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்க இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். சுங்கச்சாவடி மூலம் பாஜக மிகப்பெரிய கொள்ளையை அடித்திருக்கிறது. பணியே முடியாத சுங்கச்சாவடிகளில் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் மக்களின் உழைப்பு சுரண்டப்பட்டுள்ளது. ஏழு துறைகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பாஜக அரசு ஊழல் செய்து சம்பாதித்துள்ளது. சுதந்திர வரலாற்றில் மிக மோசமான ஊழல் இது. இதை மக்களின் கவனத்திற்கு அனைவரும் கொண்டுசெல்ல வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலமாக இறந்தவர்களுக்கு சிகிச்சை செய்தது போல் கணக்கு காட்டி பல கோடி ரூபாயை இவர்கள் ஊழல் செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இதுபோல் 20 கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்துள்ளனர். விஞ்ஞானப்பூர்வமாக செய்யப்பட்ட ஊழல் இது. 

 

இந்த ஊழலை வெளிப்படுத்திய சிஏஜி அமைப்புக்கு நாம் தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறோம். இதை நாடாளுமன்றமும் மக்கள் மன்றமும் விவாதிக்க வேண்டும். இந்த ஊழலைத் தடுப்பதற்கான மக்கள் இயக்கத்தை நாம் உருவாக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடியின் பேச்சில் வெளிப்பட்ட நடிப்பை மக்கள் ரசிக்கவில்லை. நேருவின் அற்புதமான சிந்தனையின் மூலம் உருவானது தான் இஸ்ரோ. அப்துல் கலாமின் உழைப்பு மூலம் இஸ்ரோ சிறப்பாக இயங்கியது. சென்ற முறை கிடைத்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு சந்திரயான்-3 இன்று சாதித்துள்ளது. 

 

 

சம்பளம் உட்பட பல்வேறு வகைகளில் விஞ்ஞானிகளை வஞ்சித்த மோடி, இப்போது இந்த வெற்றியில் மட்டும் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகிறார். சந்திரயான்-3 பெற்ற வெற்றி உலக நாடுகளின் மத்தியில் நம்முடைய பெருமையை உயர்த்தியுள்ளது. தாங்கள் எவ்வளவு வஞ்சிக்கப்பட்டாலும் இந்த நாட்டுக்காக உழைப்போம் என்கிற செய்தியை இந்த மோடி அரசுக்கு இதன் மூலம் விஞ்ஞானிகள் வழங்கியுள்ளனர்.
 

 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.