Skip to main content

கமல் மக்களை சந்தித்த தருணங்கள்! - ஒரு ரீவைண்ட்

Published on 20/02/2018 | Edited on 21/02/2018

கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை முன்பே தொடங்கிவிட்டாலும், தனது கட்சி பயணத்தை இன்று (21-02-2018) முதல் தொடங்குகிறார். திரையுலகில் உலகநாயகனாக இருக்கும் கமல் அரசியலில் எப்படி இருப்பார் என பலதரப்பட்ட மக்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

kamalhassan

 
கமல்ஹாசனின் குடும்பத்திற்கு ஆரம்பத்திலிருந்தே  அரசியல் தொடர்புகள்  உண்டு. ராஜாஜி, காமராஜர் கால தலைவர்கள் பலர் கமலின் தந்தையுடன் நட்பு கொண்டிருந்தனர். கமலின் அண்ணண் சாருஹாசன் தி.மு.கவிற்கு நெருக்கமான வழக்கறிஞராக இருந்து வந்தார். எம்.ஜி.ஆருடனும் கலைஞருடனும் ஆரம்பத்திலிருந்தே நட்பாக இருந்தவர் கமல். இப்படி அரசியல் தொடர்புகள் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே உண்டு.  அதைத் தாண்டி மக்களை நேரடியாக சந்தித்த தருணங்கள் பல. ஒரு இளைஞனாக இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டதை அடிக்கடி நினைவு கூர்ந்திருக்கிறார் கமல்.    

தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி அதன் மூலம் இரத்த தானம், உடல்தானம், சமூக நலம், போன்ற பொது காரியங்களில் ஈடுபட வைத்தார். இதில்  முதல் ஆளாக தானே உடல் தானம் செய்தும் காட்டினார். இப்படி பொதுவாழ்வில் அவரது தொடர்பு அவ்வப்போது இருந்தே வந்திருக்கிறது. மக்களை நேரடியாக சந்தித்த தருணங்கள் இருந்திருக்கின்றன. இதற்கெல்லாம் பிறகு இப்பொழுது அரசியலில் நேரடியாக இறங்கிவிட்டார்.
 

பாபர் மசூதி இடிப்பிற்கு எதிர்ப்பு

babri masjid

 

1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது, அன்றைய பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து மத நல்லிணக்கம் சிதைவதைப் பற்றிய தன் கவலையைத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து செயல்பட்டார்.
 

காவேரி நதிநீர் பங்கீடு பிரச்சனை

இன்றுவரை முழுமையாக முடியாத பிரச்சனை காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை. இதற்கு அனைத்து நேரங்களிலும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.

kamalhassan

 

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாகவும், மாட்டுக்கறிக்கான தடை உத்தரவை எதிர்த்தும் குரல் கொடுத்ததில் முதலாக இருந்தார்.
 

விருமாண்டி படத்தின்போது முதலில் புதிய தமிழகம் கட்சி தலைவர்  கிருஷ்ணசாமி 'சண்டியர்' என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர் படத்தின் பெயரை 'விருமாண்டி' என மாற்றினார். அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டார். ஆனால் ஜெயலலிதா மறுத்துவிட்டார். பின்னர் சென்னை கேம்பகோலா மைதானத்தில் படப்பிடிப்பை நடத்தினார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து தனது செல்வாக்கை நிரூபிக்க விரும்பிய கமல், விருமாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் பொதுக்கூட்டம் போல நடத்தினார். 

 

kamalhassan

அதன் பின் கமல்ஹாசன் படம் என்றாலே பிரச்சனை இல்லாமல் வாராது என்பது அனைவரின் மனதிலும் பதிந்துபோனது. விஸ்வரூபம் படத்தின்போது ஏற்பட்ட பிரச்சனைகளில்  அது உச்சத்தை தொட்டது. அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகள் சூழ்ந்துகொண்டிருக்க, இதனால் வெறுத்துப்போன கமல் தான் "நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை" என கூறினார். அப்போதும் அவருக்கு மக்களின் ஆதரவு இருந்தது. அப்பொழுதும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுத்து காவல்துறை ஆற்றலை வீணடிக்க முடியாது என்று கூறினார் ஜெயலலிதா. கமலின் வாழ்க்கையில் எது மாறினாலும் கடைசிவரை கமலுக்கும், ஜெயலலிதாவிற்குமான பிரச்சனை ஓயவே இல்லை. புகழ்பெற்ற வளர்ப்புமகன் திருமணத்தின் பொழுது கூட, திருமண விழாவுக்கு சென்ற கமல், மணப்பெண்ணின் தாதாவான சிவாஜி கணேசனை சந்தித்துவிட்டு ஜெயலலிதாவை சந்திக்காமலேயே வந்தார். இப்படி, அவருக்கும் ஜெயலலிதாவுக்குமான உறவு ஜெயலலிதா மரணத்தின் பொழுது "சார்ந்தோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" தெரிவிக்கும் அளவுக்குதான் இருந்தது.    
 

அரசியல் ஆர்வம் தொடர்பான முதல் அறிவிப்புக்கும் கட்சி தொடங்குவதற்குமான இடைவேளை மிகக் குறைவே. அவரின் சினிமா போட்டியாளரான ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட அவகாசம் மிக அதிகம். சிலரால் அவசர கோலம் என விமர்சிக்கப் படுகிறது கமலின் அரசியல் கோலம். சொல்லப் போனால் முதல் புள்ளியை இப்பொழுது வைத்திருக்கிறார், கோலத்தை பொறுத்திருந்து காண்போம்.

 

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.