Skip to main content

உலகிலேயே முதல்முறையாக அறுவைச் சிகிச்சை இன்றி தாய்ப்பால் தரும் திருநங்கை!

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

உலகிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவர் தாய்ப்பால் கொடுக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இதற்காக அவருக்கு எந்தவிதமான அறுவைச் சிகிச்சையும் செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த அந்த திருநங்கை வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற நினைத்திருக்கிறார். வாடகைத்தாய் ஐந்து மாத கர்ப்பமாக இருந்தபோது, மருத்துவமனையை அணுகிய அவர், ‘என் குழந்தையை சுமக்கும் வாடகைத்தாய் தாய்ப்பால் கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துவிட்டார். எனவே, அந்தப் பொறுப்பை நானே எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். அதற்கான சிகிச்சைகள் குறித்து விளக்குங்கள்’ எனக் கேட்டுள்ளார்.

 

breast

 

பெயர் வெளியிடாத இந்தத் திருநங்கைக்கு வயது 30. ‘மவுண்ட் சினாய் சென்டர் ஃபார் ட்ரான்ஸ்ஜெண்டர் மெடிசின் அன்ட் சர்ஜரி’ என்ற மருத்துவமனையில் இதற்கான சோதனை நடைபெற்றுள்ளது. அதில் திருநங்கைக்கு எந்தவிதமான அறுவைச் சிகிச்சையும் செய்யாமல், ஹார்மோன் மருந்துகள் மூலமாக பால் சுரப்பிகளை தூண்டியுள்ளனர் மருத்துவர்கள். வேறு சில சிகிச்சைகளும் அந்தத் திருநங்கைக்கு வழங்கப்பட்ட நிலையில், அவருக்கு துளிகளாக பால் சுரந்துள்ளது. தொடர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு நாளொன்றுக்கு 8 அவுன்ஸ் வரை பால் சுரப்பதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு பால் சுரப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதனால், குழந்தைக்கு எந்தவிதமான பிரச்சனை இல்லை எனக்கூறியுள்ள மருத்துவர்கள், குழந்தை நல்ல உடல்நலனுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ஐ.டி. திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்; சென்னையில் பயங்கரம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
The brutality of a transgender who worked in IT; Terrible in Chennai

குழந்தையைக் கடத்த வந்த நபர் எனத் திருநங்கை ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி இருந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் திருநங்கை ஒருவர், பம்மல் மூங்கில் ஏரிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு நேர உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். பின்னர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தனியாகச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த நபர்கள் சிலர் திருநங்கையைப் பார்த்தவுடன் அவர் குழந்தைகளைக் கடத்த வந்தவர் எனப் பேசிக்கொண்டே அவரை நெருங்கினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருநங்கையோ 'தான் இந்த பகுதியில் தான் வசித்து வருகிறேன்' எனத் தெரிவித்தார். இருப்பினும் விடாத அந்த நபர்கள், அவரைத் தாக்கியதோடு அரை நிர்வாணப்படுத்தி அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

அந்த பகுதியில் இருந்த சில நபர்களும் திருநங்கையைக் கொடூரமாகத் தாக்கினர். இந்த தகவல் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் மின் கம்பத்தில் கட்டப்பட்ட திருநங்கையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருநங்கை ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பரவிய நிலையில், வீடியோ பதிவு அடிப்படையில் முருகன், நந்தகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோகன், அசோக்குமார் என்பவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மையில், சென்னையில் குழந்தை கடத்தும் கும்பல் ஒன்று குழந்தைகளைக் கடத்தி உடல் உறுப்புகளை அறுத்து எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் பரவிய நிலையில், அந்த வீடியோவில் குழந்தைகளை கடத்தும் நபர் போலவே திருநங்கை இருந்ததால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவில், ''நீ தான இது" என நபர்கள் சிலர் மொபைலில் உள்ள வீடியோவை காட்டி கேள்வி எழுப்பினர். ஆனால் திருநங்கை 'அது நான் இல்லை' என சொல்லியும் கேட்காமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.