Skip to main content

காகிதங்களை சேமிக்கும் முயற்சியில் இறங்கும் ரயில்வே!

Published on 22/02/2018 | Edited on 22/02/2018

ரயில்களில் முன்பதிவு செய்தோருக்கான அறிவிப்பை ஒட்டுவதை நிறுத்த சமீபத்தில் ரயில்வே துறையில் முடிவெடுக்கப்பட்டது. தினந்தோறும் இதற்காக ஆகும் செலவைக் குறைத்து, இனி டிஜிட்டலுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் முயற்சியிலும் அது இறங்கியது. 

 

train

 

அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயணிகள் அதிகம் கூடும் சென்னை செண்ட்ரல், புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன், மும்பை செண்ட்ரல், ஹவுரா மற்றும் சீல்டா உள்ளிட்ட ரயில்நிலையங்களில் இந்த முறை முயற்சி செய்து பார்க்கப்பட்டது.

 

இந்நிலையில், வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் ஏ, ஏ1 மற்றும் பி வகையிலான அனைத்து ரயில்நிலையங்களுக்கு வரும் ரயில்களிலும், இனி முன்பதிவு செய்தோரின் விவகரங்கள் ஒட்டப்படமாட்டது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

 

இன்னும் ஆறு மாதங்களுக்கு அனைத்து ரயில்நிலையங்களிலும் எலெக்ட்ரானிக் டிஸ்ப்ளேக்கள் வைக்கப்படும். தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படலாம் என்பதால், கூடுதல் கவனத்துடன் செயல்படவும், தேவைப்பட்டால் காகிதத்தாலான விவரங்களை ஒட்டவும் ரயில்நிலையங்களுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது. 

 

பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களே ரயில் சேவையைப் பயன்படுத்தும் நிலையில், கிராமப்புற பகுதிகளில் டிஜிட்டல் போர்டுகளை அடையாளம் காண்பதற்கு சிரமமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.