Skip to main content

சவரக்கத்தி - கூர்மையா மொன்னையா?

Published on 12/02/2018 | Edited on 12/02/2018
savarakathi


அன்றாட வாழ்வில் கத்தியின் பயன் அளப்பரியது. ஒரு உயிர் ஜனிப்பதில் ஆரம்பித்து, மண்ணில் புதையும் வரை கத்தி நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருக்கிறது. கத்தியை வைத்து நல்ல செயல்களையும் செய்யலாம். அதே கத்தியை வைத்து கொலை, கொள்ளை, வன்முறையிலும் ஈடுபடலாம். இப்படி, கையாள்பவரின் மனநிலையை பொறுத்து பயன் தரும் கத்தி, சவரக்கத்தியாய் நமக்கு தரும் சேதி என்ன...

சவரத்தொழிலாளியான ராம், தனது கர்ப்பிணி  மனைவி பூர்ணாவுடன் அவரது  சகோதரனின் காதல் திருமணத்தை நடத்திவைக்க  செல்கிறார். பரோலில் வெளியில் வந்துவிட்டு மாலைக்குள் சிறைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்  தாதாவான மிஷ்கின். ஒரு சிறு விபத்தில் அவரை உரசி விட்டு ராம் சென்று விட, கோபமடைந்த மிஷ்கின், ராமை கொன்றே தீர வேண்டும் என உறுதி மொழி ஏற்று அவரை விடாமல் துரத்துகிறார். இருவருக்குமிடையில் நடக்கும் துரத்தல் விளையாட்டுதான் சவரக்கத்தி. 
 

savarakathi


முகலாயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் இருந்து தன் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சவரக்கத்தியை இப்போதும் வைத்து சவரம் செய்து காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறார் ராம். ஒரு நடுத்தர வயது  சவரத்தொழிலாளியின் உருவத்தோற்றம், பாவனை என அனைத்திலும் கனகச்சிதமாக பொருந்துகிறார். மிஷ்கினிடம் அடிவாங்கும் இடத்திலும், கெஞ்சும் போதும், காத்து கேளாத பூர்ணாவிடம் வாக்குவாதம் செய்யும் இடத்திலும் என படம் முழுவதும் அவர் காட்டிய உணர்ச்சிகாரமான நடிப்பு தங்கமீன்களில் செய்ததைவிட இருமடங்கு அதிகம். ஆனால் அந்த வெளிப்பாடு சில இடங்களில் அதீதமாகிறது. சரியாகக் காது கேளாதவராக வரும் பூர்ணாவை, 'இவ்வுளவு நாள் எங்கம்மா இருந்த?' என்று கேட்கத்  தோன்றுகிறது. வயிற்றுப் பிள்ளைக்காரியாகவும், வாயில் வசவுச் சொல்லுக்காரியாகவும் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு அவ்வுளவு உயிர் கொடுத்திருக்கிறார். அதுவும் சொந்தக் குரலில் பேசியிருப்பது மேலும் பலம் சேர்த்துள்ளது. ஒன்றுக்கும் ஆகாத பெண்ணாக இருந்தும் சிக்கலான நேரத்தில் சமயோசிதமாக பிரசவ வலி எடுத்துத் தப்பிக்கும் இடமாகட்டும், வில்லனிடம் தன் கணவனுக்காக வாதாடி மாட்டிக்கொள்ளும் இடமாகட்டும், காமெடியில் பின்னியிருக்கிறார். பூர்ணாவுக்கு தமிழ் சினிமாவில் இன்னும் பல வாய்ப்புகள் தந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாதா மாங்காவாக வரும் மிஷ்கின் தன் பெரிய உடலுடன் அனாயாசமாக ஓடி, காம்ப்ரமைஸ் பண்ணாமல் ராமின் கையையோ, காலையோ வாங்க வெறியுடன்  படம் முழுவதும் சுற்றுகிறார். பல இடங்களில் அவருடைய நடிப்பு மிகையாகத் தோன்றுகிறது. மற்றபடி நடிப்பில் வழக்கமான மிஷ்கினை மாற்றி வேறு மிஷ்கினை காட்டியுள்ளார். மிஷ்கினின் அடியாட்களாக வரும் அத்தனைப் பாத்திரங்களும் அவரவர் பங்குக்கு ரசிக்க வைக்கிறார்கள். 

மிஷ்கின் ஸ்டைல் திரைக்கதை படத்திற்கு பலம். ஒரு பாடல் கூட இல்லாமல் இரண்டு மணி நேரம் அயர்ச்சி இல்லாமல் உட்கார வைக்கிறார். ஒரு சின்ன நூலைத் திரியாக்கி, சிக்கலுக்குள்ளாக்கி அதையும் சீரியஸாக்காமல் நகைச்சுவையுடன் கதை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும், உடல் மொழியால் நகைச்சுவை செய்யும் சார்லி சாப்ளின், நாகேஷ் வகை ஸ்லாப்ஸ்டிக் காமெடியை பிரதானமாக வைத்து நகர்த்தியுள்ளனர். சின்ன சின்ன வசனங்களில் அரங்கை சிரித்து தெறிக்க வைத்துள்ளனர். ஆனால் அது தொடர்ச்சியாக நிகழாது. எந்த வகை படமென்றாலும் அதில் மிஷ்கின் பாணி இருப்பது அவருக்கு பலம். அதை மீறாமல் இயக்கியிருக்கிறார் ஆதித்யா. கிளைமாக்ஸில் திடீரென்று நிகழும்  மிஷ்கின் மனமாற்றம் இயல்பாக இல்லை. அரோல் கரோலியின் (comical) காமிக்கல் இசை படத்தின் மனநிலையை நம்முள் அழகாக செலுத்துகிறது. கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவில், கேமரா கோணங்கள் வித்தியாசம். 

சவரக்கத்தி - கூர்மையான காமெடி, அறுவையாக இருக்காது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லோரும் டி.வியில் சீரியல் பாருங்கள்' - இயக்குனர் மிஷ்கின் வலியுறுத்தல் 

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
myskin

 

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் மும்பையை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஸ்ரீகாந்த் பாஷி என்பவரால் 2014ம் ஆண்டு கார்னிவெல் சினிமாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அது முதல் இதுவரை 104 நகரங்களில் 400 முதல் 500 ஸ்கிரீன்களை நிறுவி, பலமல்டிபிளக்ஸ் திரையரங்கங்களை, நல்ல முறையில் நிர்வாகித்து வரும் 'கார்னிவெல் சினிமாஸ்' நிறுவனம், சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள  ஈ.வி.பி சிட்டியில் ஒரே வளாகத்தில் 6 திரையரங்குகளை மிகப் பிரமாண்டமாக நிறுவி நேற்று கோலாகலமாக திறந்துள்ளது. EVP - கார்னிவெல் சினிமாஸ் எனும் பெயரில் திகழும் இந்த மல்டி பிளக்ஸில் உள்ள 6 திரையரங்குகளில் ஸ்கிரீன் -1 ல் 213 இருக்கைகளும், ஸ்கிரீன் -2 மற்றும் 5-ல் 323, ஸ்கிரீன் 3 & 4 - ல் 221,ஸ்கிரீன்- 6 ல் 214 இருக்கைகளுமாக இந்த ஒரு மல்டி பிளக்ஸின் 6 திரையரங்குகளில் மட்டும் கிட்டத்தட்ட 1500 இருக்கை வசதிகள் உள்ளன. அதே மாதிரி இஙகுள்ள ஒரு திரையரங்கம் 4-கே புரஜக்ஷன் வசதியும் மீதி 5 திரையரங்கங்கள் 2 -கே புரஜக்ஷன் வசதியும் கொண்டவை. மேலும், இத்திரையரங்க வளாகத்தில் தமிழக திரையரங்கங்களில் இதுவரை இல்லாத வசதியாக மகளீருக்கென பிரத்யேகமாக பிங்க் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இத்தனை வசதிகள், இத்தனை பிரமாண்டம் இருந்தும் தமிழக அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணமும், அரசு அறிவுரைத்த மாதிரி ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வார நாட்களில் 4 காட்சிகளும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 5 காட்சிகளும் திரையிடப்படவுள்ளது.

 

 

சென்னையில் EVP சிட்டியில் நடந்த இந்த "EVP - கார்னிவெல் சினிமாஸ் மல்டி பிளக்ஸ் திரையரங்கங்கள் கோலாகல தொடக்க விழாவை EVPகுரூப் நிர்வாகி ஈ.வி.பெருமாள்சாமி, அவரது மகனும் ஈவி.பி குரூப் எம்.டியுமான சந்தோஷ் ரெட்டி, கார்னி வெல் எம்.டி   P.V.சுனில், கார்னிவெல் சென்னை நிர்வாகி ஜுனித் உள்ளிட்டோர் தங்கள் குடும்ப சகிதமாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அவர்களுடன் பிரபல படத்தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், வினியோகஸ்தர் அருள்பதி, இயக்குனர்கள் மிஷ்கின், ராம், பாபு கணேஷ், நட்சத்திரங்கள் வைபவ், சவுந்திரராஜன், 'பேரன்பு ' சாதனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

இந்த  EVP - கார்னிவெல் சினிமாஸ் ஸ்கிரீன் - 2 வின் பிரமாண்ட அகண்ட திரையில், காண்போர் கண்ணையும் கருத்தையும் கவரும் டால்பி எஃபெக்ட் படமும், "விஸ்வாசம்" படத்தில் இருந்து சில காட்சிகளும் விருந்தினர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டு,  இத்திரையில் "பேரன்பு" திரைப்படமும் முதன் முதலாக திரையிடப்பட்டது. முன்னதாக இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பேசிய இயக்குனர் மிஷ்கின்...."கடவுளுக்கு அப்புறம், நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரைகளைத்தான். எனவே, எல்லோரும் டி.வியில் சீரியல் பாருங்கள். இது மாதிரி பெரிய ஸ்கிரீனில் சினிமா பார்க்க வாருங்கள் பைரஸியை திருட்டு வி.சிடியை திரும்பி பார்க்காதீர்கள்" என்றார். பின்னர் இயக்குனர் ராம் பேசும்போது... "எனது 'பேரன்பு' முதல் சினிமாவாக இங்கு திரையிடப்படுவது சந்தோஷம் பெருமை" என்றார்.

 

அதன்பின், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட்டாக, கார்னி வெல் எம்.டி  P.V.சுனில், கார்னிவெல் சென்னை நிர்வாகி ஜுனித் உள்ளிட்டோர் பதில் அளித்தனர். அதன்சாரம்சம் வருமாறு... "சிங்கப்பூர் , மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் கிட்டத்தட்ட  500 ஸ்கிரீன்கள் உள்ளன. சென்னையில் முதல் பிக்கஸ்ட் மல்டி பிளக்ஸ் தியேட்டர் இதுதான். இன்னும் 2 வருடங்களில் 100 தியேட்டர்களை தமிழகத்தில் கார்னிவெல் உருவாக்கும் உலகளவில் 1000 திரையரங்குகள் திட்டமிட்டுள்ளோம். மேலும், தமிழ்படத்தயாரிப்பிலும், வினியோகத்திலும் நேரடியாகவும் இறங்க உள்ளோம். எங்களுடன் EVP M.D திரு.சந்தோஷ் இணைந்து இந்த  EVP CARNIVAL மல்டி பிளக்ஸ் திரையரங்கத்தை உருவாக்கியதும் நாங்கள் இணைந்ததும் மிக்க மகிழ்ச்சி. அடுத்து ஆவடி மற்றும், மதுராந்தகம் அருகில் 6 ஸ்கிரீன் மல்டி பிளக்ஸ் தியேட்டர் உருவாக்க உள்ளோம். மேலும், சென்னை சிட்டிக்குள்ளும் புதிய மால்கள் கட்டப்பட்டால் கார்னிவெல் சினிமாஸ் அங்கும் கால்பதிக்கும். அதுவரை இது மாதிரி சிட்டி லிமிட்டிற்கு வெளியே உருவாகியுள்ள தியேட்டருக்கு எங்கள் நிறுவனம் சார்பில் குறைந்த பட்சம் இரவு காட்சிகள் முடிந்தபின் போக்குவரத்து வசதியும் தர தீர்மானித்துள்ளோம். மற்றபடி, பாப்கான் முதல் பார்கிங் வரை மற்ற மால்களை விட விலை மலிவாக தர பேசி வருகிறோம்" என்றனர்.