Skip to main content

செய்ததை வீடியோவில் காட்டியுள்ளோம்- ராதிகா, வரலக்‌ஷ்மிக்கு விஷால் பதிலடி...

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணி இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறது.
 

vishal

 

 

இவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலமையில் ஐஷரி கணேஷ், பிரசாந்த், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் சுவாமி ஷங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர். இந்த இரு அணிகளும் கடுமையான போட்டியுடன் மோதுகின்றனர்.
 

இந்நிலையில் பாண்டவர் அணி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வீடியோ ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாண்டவர் அணி எதற்காக தேர்தலில் போட்டியிட்டது. சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் பதவியை துஷ்பிரயோகம் செய்தனர். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. இந்த வீடியோவை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
 

இந்நிலையில் நேற்று கமல்ஹாசனை சந்தித்துவிட்டு திரும்புகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் அவர்கள் இருவரின் கண்டனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். “முந்தையத் தேர்தலில்  ‘நாங்கள் என்ன செய்யவில்லை’ என்று ராதிகா பேசினார். அதற்கான பதில் தான் அந்த வீடியோ. சும்மா ஏவி விடுவதற்கான வீடியோ அல்ல. நாங்கள் என்ன செய்தோமோ அதை வீடியோவில் காட்டியுள்ளோம். தண்டனை செய்திருந்தால் சட்ட ரீதியாக தண்டனை விதிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதைத்தான் செய்தோம். என்ன நடந்தது, என்ன செய்தோம் என்பது தான் அந்த வீடியோ. அதில் தவறில்லை.
 

 

 

வரலட்சுமி உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் ஒரு கருத்து உள்ளது. என்னிடம் சில விஷயங்களைக் கேட்டால், என் நண்பர்கள் மீது என்ன கோபம் என்பதை வெளிப்படையாகச் சொல்வேன். ஒவ்வொருவருக்கும் அவர்கள் நினைப்பதைச் சொல்வதற்கு உரிமையுள்ளது.
 

ஒரு விஷயம், காவல்துறையினர் ஒருவர் மீது சாதாரணமாக எஃப்.ஐ.ஆர் போடமாட்டார்கள். நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரணை செய்தி அறிக்கை தர வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். அனைத்துமே நிரூபிக்கப்பட்டு தான் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் விஷால்.

 

 

சார்ந்த செய்திகள்