பெங்காலி மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இப்போது அவர் நடித்துள்ள படம் 'ஷிப்பூர்'. இப்படம் கடந்த மே 5ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்தீப் சர்க்காரின் மீது நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். அவர் கூறுகையில், "தனது மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பதாகவும் ஒத்துழைக்காவிட்டால் அவற்றை ஆபாச வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று சர்கார் சார்பாக ரவீஷ் ஷர்மா என்ற நபரிடமிருந்து மின்னஞ்சல்கள் மூலம் அச்சுறுத்தினர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் வருகிற 30ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து பதிவிட்ட ஸ்வஸ்திகா முகர்ஜி பாலியல் புகார் குறித்து மறுபடியும் பேசியுள்ளார்.
அந்தப் பதிவில், "பாலியல் துன்புறுத்தல் ஒரு நகைச்சுவை விஷயம் அல்ல. அதற்கு மன்னிப்பே இருக்கக் கூடாது. தயாரிப்பாளர்கள் எல்லாம் குளிர்ச்சியாகவும் கூலாகவும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. அப்படி ஒருபோதும் இருக்காது" என தனது ஆதங்கத்தை குறிப்பிட்டுள்ளார்.