Skip to main content

"விஜய் காகம் இல்லை பருந்து தான்" - வைரலாகும் கமலின் வீடியோ

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

 Kamal's video goes viral

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தில் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவராஜ் குமார், மற்றும் தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் முதல் பாடலான  ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாடலான ‘ஹூக்கும்’ பாடலை தொடர்ந்து  ‘ஜூஜூபி’ பாடலும் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  சமீபத்தில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில், ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

 

இந்த விழாவில் ரஜினிகாந்த் ‘ஹூக்கும்’ பாடலில் இடம்பெற்ற பட்டத்தை பறிக்க நாலு பேரு வரியை குறிப்பிட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பேசியிருந்தார். அதில் அவர், “காட்டுல சின்ன மிருகங்கள் எப்பவும் பெரிய மிருகங்களை தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும். உதாரணத்துக்கு காக்கா எப்பவும் பருந்தை சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனா, பருந்து எப்பவும் அமைதியா இருக்கும். பறக்கும் போது பருந்தை பார்த்து காக்கா உயரமா பறக்க நினைக்கும். இருந்தாலும் காக்காவால அது முடியாது. ஆனா, பருந்து இறக்கையை கூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்துல பறந்துக்கிட்டே இருக்கும். சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பிரச்சனை இப்ப இல்ல. 1977 லயே ஆரம்பிச்சிருச்சு. அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன். ஆனா, ரஜினி பயந்துட்டாருன்னு சொன்னாங்க. நாம பயப்படுறது ரெண்டே பேருக்குதான். ஒன்னு அந்த பரம்பொருள் கடவுளுக்கு இன்னொன்னு நல்லவங்களுக்கு. மற்றபடி யாருக்கும் பயப்படுறதில்ல” என்று பேசியிருந்தார்.

 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியது. குறிப்பாக காகம் என்பதை விஜய்யை தான் குறிப்பிட்டு ரஜினி சொல்கிறார் என்று பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு கமல் நடிப்பில்  வெளியான தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசியதை தற்போது இணையவாசிகள் முக்கியமாக விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்த இசை விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கலைஞர், பிரபல நடிகர் ஜாக்கி ஜான், மலையாள நடிகர் மம்முட்டி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, தசாவதாரம் படத்தின் கதாநாயகனான கமல் அந்த நிகழ்ச்சியில் பேசினார். அதில் அவர், விஜய்யை குறிப்பிட்டு “விஜய் நடித்த படம் வேண்டுமானால் குருவியாக இருக்கலாம். ஆனால், அவர் வானில் உயர உயரப் பறக்கும் பருந்து தான்” என்று பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்