Skip to main content

‘தி கோட்’ - அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
the goat vijay venkat prabhu movie update

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’லிரிக் வீடியோ வெளியானது. இதையடுத்து இரண்டாவது பாடல் ஜூன் மாதம் வெளியாகும் என வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். அடுத்த மாதமான ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

the goat vijay venkat prabhu movie update

இந்த நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விஜய் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார். இதையடுத்து தற்போது அவருக்கான வி.எஃப்.எக்ஸ் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“எம்.ஜி.ஆர் போல் விஜய்யும் மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார்” - செல்லூர் ராஜூ

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Sellur Raju says Like MGR, Vijay also wants to help people

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அ.தி.மு.க, தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதற்கிடையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்தார். இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தான் பிரதான இலக்கு என்றும், ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (18-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், த.வெ.க தலைவர் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவர் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது அவருடைய நோக்கம். தனிப்பட்ட முறையில் ஒரு இளைஞர் (விஜய்) எம்.ஜி.ஆர் போல் தான் சம்பாரித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து உதவ நினைக்கிறார். அவர் களத்திற்கு வந்த அவருடைய கொள்கை, செயல்பாடு உள்ளிட்டவையெல்லாம் முதலில் சொல்லட்டும். எப்போதுமே அதிமுக யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை வச்சுக்காது. அவர் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் நல்லது தான்” என்று கூறிச் சென்றார். 

Next Story

‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிலைப்பாடு என்ன?’- த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
T.V.K. leader Vijay's announcement What is the stand on the Vikravandi by-election?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே. எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கழகத் தலைவர், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.