ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி நிறைவு விழா
ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் ஜெனரல் விஜயகுமார் கலந்து கொண்டார்.
ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ போலீஸ் படை பயிற்சி மையத்தில் நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு 44 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது 22 மாநிலங்களை சேர்ந்த 664 பேர் பயிற்சி பெற்று வந்தனர்.
இவர்களுக்கு பயிற்சியின் போது உடற்தகுதி, அணிவகுப்பு, ஆயுதப்பயிற்சி, நவீன ஆயுதங்களை கையாளுதல், வெடிப்பொருட்கள் மற்றும் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து அழித்தல் குறித்து பயிற்சி அளிக்கபட்டது.
மேலும் இந்திய குற்றவியல் சட்டம், சி.ஆர்.பி.எப். சட்டம், மனித உரிமைகள், முதலுதவி, பேரிடர் மேலாண்மை, ஐ.பி.எஸ். பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அத்துடன் நக்சலைட்டுகள், தீவிரவாதிகளை கையாளும் வகையில் நான்கு வார கால வனப்பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பயிற்சி மைய முதல்வர் மனோஜ்குமார் துபே வரவேற்றார். மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குனர் ஜெனரல் விஜயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி, பயிற்சி பெற்ற போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
அத்துடன் சிறப்பாக பயிற்சி பெற்ற புஷ்பேந்திரகுமார், பட்டில்விஜய், அக்ஷயகுமார், சந்தீப்குமார் ஆகியோருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். பயிற்சி பெற்ற வீரர்கள் போர் பயிற்சி, தீவிரவாதிகள் மற்றும் நக்சலட்டுகளை கையாளுதல், மோட்டார் வாகன சாகசம் உள்ளிட்டவை செய்து காட்டினர்.
பின்னர் விஜயகுமார், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 18 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 6 ஆயிரம் பேர் பயிற்சியை நிறைவு செய்து உள்ளனர். வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மீதம் உள்ள 8 ஆயிரம் பேர் பயிற்சியை நிறைவு செய்வார்கள்.
தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 5 ஆயிரம் பேர் இளைஞர்களாக உள்ளனர். இதனால் புதுப்பொலிவு பெற்று உள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வடகிழக்கு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதத்தையும் மேற்குவங்காளம், மராட்டியம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதியில் நக்சலைட்டுகளை சமாளிப்பதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தீவிர பணியாற்றி வருகிறது.
நக்சலைட்டுகள் தற்போது நவீன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதை சமாளிக்கும் வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. நவீன வெடிகுண்டுகள், ஆயுதங்களை கையாளுதல் தொடர்பாக ராணுவத்தைப் போலவே சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. காஷ்மீர், வடகிழக்கு, மத்திய, தென்மண்டலம் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொருத்தமட்டில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இல்லை. இங்கு சிறப்பு அதிரடிப்படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவே அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகளை குறி வைத்து நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நக்சல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.300 கோடி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் அங்குள்ள கிராமங்களில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நக்சல் தேடுதல் வேட்டையின் போது மனித உரிமைகள் மீறாமல் பார்த்துக் கொள்கிறோம். நக்சல்கள்தான் அத்து மீறி ஈடுபடுகின்றனர்’’ என்று கூறினார்.