ஒலிம்பிக் நாயகர்கள் சுஷில்குமார்- விஜயகுமாருக்கு தலா ரூ.1 கோடி: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுஷில்குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கு மத்திய பிரதேச மாநில அரசு தலா ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் பிறந்தநாளையொட்டி மத்திய பிரதேசத்தில் ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா போபாலில் நேற்று நடந்தது. விழாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ‘ஷிகர்கேல் அலங்காரன்-2012’ விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பேசுகையில், ‘ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமார், துப்பாக்கி சுடும் வீரர் விஜய்குமார் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால், ககன் நரங், மேரிகோம், யோகேஷ்வர் தத் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும். 2016ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி வீரர்களை தயார்படுத்தும் பொறுப்பை மத்திய பிரதேசம் ஏற்க தயாராக உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். வீரர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, முறையான பயிற்சி அளிக்க எங்களால் முடியும் என்றார். இவ்விழாவில் கலந்துகொண்ட மல்யுத்த வீரர் சுஷில்குமார், நாட்டிற்கு ஒரு தங்கப்பதக்கம் வென்று கொடுப்பதே தனது நோக்கம் என்று கூறினார்.