நடிகர் விஷால் படத்தை வெளியிட தடை
மதுரையில் உள்ள அக்வாஷ்ரே மூவீஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விஜய். இவர் மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘’எங்கள் அக்வாஷ்ரே மூவீஸ் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு முதல் "சமர்'' என்ற பெயரில் புதுமுகங்களை வைத்து ஒரு தமிழ்த் திரைப்படம் தயாரித்து வருகிறேன். அந்த படத்தை சக்திமோகன் என்பவர் இயக்கி வருகிறார். சென்னையில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எங்கள் படத்தின் சமர் என்ற தலைப்பை கடந்த ஆண்டு முறையாக பதிவு செய்துள்ளோம். நடப்பு ஆண்டிலும் அதனை புதுப்பித்துள்ளோம்.
இந்தநிலையில் பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில் ரமேஷ் தண்ட்ரா தயாரிப்பில் டைரக்டர் திருகிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகை திரிஷா நடிக்கும் திரைப்படத்துக்கு சமர் என்று தலைப்பு வைத்து விளம்பரம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து சமர் என்ற பெயரிலேயே அந்த நிறுவனத்தினர் பேட்டி மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.
இதனால் எங்கள் தரப்பினர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே முறைப்படி நாங்கள் பதிவு செய்துள்ள சமர் என்ற தலைப்பில் அவர்கள் திரைப்படத்தை வெளியிடவும், அதனை பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு நீதிபதி எம்.ஜோதிராமன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் ஜான்ஸ்டீபன், ராமு ஆகியோர் ஆஜராகி வாதாடினர். விசாரணை முடிவில், எதிர்தரப்பினர் சமர் என்ற தலைப்பில் அவர்களது புதிய திரைப்படத்தை வெளியிடவும், அந்த தலைப்பை பயன்படுத்தவும் இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரமேஷ் தண்ட்ரா ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக வருகிற 31-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீசு அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.