மனைவி தற்கொலை செய்ததை அறிந்து வீடு திரும்பிய என்ஜினீயர் விபத்தில் பலி: 3 மாத குழந்தை தவிப்பு
மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு காரில் அவசரமாக வீடு திரும்பிய என்ஜினீயர் பஸ்சில் மோதி பலியானார்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த சிக்கத்தம்பாளையத்தை சேர்ந்தவர் விசுவநாதன். இவர் மேட்டூர் அணையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் ரமேஷ்குமார்(வயது 33) என்ஜினீயரிங் படித்து விட்டு தெற்கு கொரியாவில் பணிபுரிந்து வந்தார். ரமேஷ் குமாருக்கும், ரஞ்சிதாவுக்கும்(23) கடந்த 11/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. யாழினி என்ற 3 மாத பெண் குழந்தை உள்ளது. ரமேஷ்குமார் கடந்த 5 மாதத்திற்கு முன்பு தெற்கு கொரியாவில் இருந்து சிக்கத்தம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
ரமேஷ்குமாரின் தம்பி சுரேஷ்குமாருக்கு 29-ந் தேதி துறையூரில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு புதிய துணிகள் எடுப்பதற்காக நேற்று காலையில் ரஞ்சிதாவை மட்டும் வீட்டில் விட்டு விட்டு ரமேஷ்குமார் தனது தந்தை விசுவநாதன், தாயார் சரோஜா ஆகியோருடன் காரில் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். காரை அவரே ஒட்டி சென்றார்.
அப்போது ரமேஷ்குமாரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் ரமேஷ்குமாரின் மனைவி ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். தன்னை மட்டும் வீட்டில் விட்டு விட்டு கணவர் துணி எடுக்க சென்றதால் மனம் உடைந்த ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் ரமேஷ்குமார் பதற்றம் அடைந்தார். உடனடியாக அவர் மட்டும் காரை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு விரைந்து சென்றார். துறையூர்-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகில் கார் சென்றபோது எதிரில் துறையூரில் இருந்து சமயபுரம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சின் மீது கார் பயங்கரமாக மோதியது.
பஸ்சின் மீது கார் மோதிய வேகத்தில் பஸ்சுக்கு அடியில் கார் சிக்கிக் கொண்டது. இதனால் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனைத்தொடர்ந்து உடனடியாக அங்கு கிரேன் வரவழைக்கப்பட்டு கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.
காருக்குள் உயிருக்கு போராடி கொண்டு இருந்த ரமேஷ்குமாரை மீட்டு உடனடியாக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சேர்த்த சில வினாடிகளில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக செத்தார்.
ஒரே நாளில் அடுத்தடுத்து தாயையும், தந்தையையும் பறிகொடுத்த 3 மாத குழந்தையின் நிலை பரிதாபமாக உள்ளது.