நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ஆத்தூரில் விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால், கோர்ட்டு உத்தரவுபடி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கடம்பூரை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் அருள்மணி (வயது 19), இருசக்கர வாகன மெக்கானிக். கடந்த 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி இவர் தனது நண்பருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் பக்கமுள்ள உடையாப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருள்மணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து அருள்மணியின் தந்தை ராஜு, தாய் இந்திராணி ஆகியோர் நஷ்டஈடு கேட்டு ஆத்தூர் சப்-கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த அப்போதைய நீதிபதி, அருள்மணியின் குடும்பத்துக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 103 நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.
ஆனால், நஷ்டஈடு வழங்காததால் ராஜு கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி முத்துகிருஷ்ணன், நஷ்டஈடு வழங்காததால் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட்டு அமீனா சக்திவேல் ஆத்தூர் புதிய பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்தார். பின்னர் அந்த பஸ்சை கோர்ட்டுக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.