தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள்: மருத்துவக் கல்லூரி டீன் பேச்சு
தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு கூடுமே தவிர ஒருபோதும் குறைந்துவிடாது என்று சென்னை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் வி.கனகசபை கூறினார்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உலக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது.
இதில், தாய்ப்பால் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் தொடர்பான வினாடி-வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு நாடகமும் நடத்தப்பட்டது. தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தாய்மார்களுக்கு டாக்டர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
விழாவில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் வி.கனகசபை பேசும்போது கூறியதாவது:-
தாய் பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன்பிறகு 2 முதல் 3 வயது வரை தாய்ப்பாலோடு சேர்த்து இதர உணவுகள் கொடுக்கலாம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும். அவர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் தங்கள் அழகு குறைந்துவிடும் என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அது தவறு. தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு கூடுமே தவிர ஒருபோதும் குறைந்துவிடாது. தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் தமிழகம் 20-வது இடத்தில் உள்ளது. இது மிகவும் வருத்தத்திற்கு உரியது. முதலிடத்தில் மிஜோராம் மாநிலம் இருக்கிறது.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள். கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்வோராக இருந்தால், தாய்ப்பால் குடிப்பதால் கிடைக்க வேண்டிய பாசம் அந்த குழந்தைக்கு கிடைக்காது. குழந்தை பருவத்தில் தாயின் பாசம் கிடைக்காத காரணத்தினால்தான் அந்த குழந்தை வளர்ந்து இளமை பருவத்தில் பாசத்தை வெளியே தேடி காதலில் விழுகிறது என்பதை பெற்றோர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
எனவே, உங்கள் குழந்தைகள் பிற்காலத்தில் நல்லவர்களாக, சிறந்த குடிமக்களாக இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். குழந்தைகள் நல்ல குடிமக்களாக வளர்ந்தால், அதனால் நாடு முன்னேறும். இவ்வாறு டாக்டர் கனகசபை கூறினார்.