துணை ஜனாதிபதி தேர்தல் : நாளை ஓட்டுப்பதிவு
14-வது ஜனாதிபதி தேர்தல் கடந்த ஜுலை 19-ந் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்றார். அவர் ஜுலை 25-ந் தேதி புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து, நாளை (செவ்வாய்க்கிழமை) துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் போட்டியிடுகிறார். இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரு கின்றன. பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் வாக் குச்சாவடியில் இரு சபைகளின் எம்.பி.க்களும் வாக்கு அளிப்பார்கள்.
வாக்குப்பதிவு முடிந்ததும் மாலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதால், அந்த அணியின் சார்பில் போட்டியிடும் ஹமீது அன்சாரி எளிதில் வெற்றி பெற்று மீண்டும் துணை ஜனாதிபதி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு சபைகளிலும் மொத்தம் உள்ள 790 எம்.பி.க்களில் ஹமீது அன்சாரிக்கு 500-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் வாக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜுலை 18-ந் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மதிய விருந்து அளித்தார்.
அதேபோல், துணை ஜனாதிபதி தேர்தலையொட்டியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கும், கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் சோனியா காந்தி இன்று (திங்கட்கிழமை) மதியம் விருந்து அளிக்கிறார்.
சோனியா காந்தி அளிக்கும் இந்த விருந்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்கிறார்கள். மதிய விருந்தில் கலந்து கொள்ளுமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டு இருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் சுதிப் பந்தோபாத்யாயா நேற்று கொல்கத்தாவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.