ஜெயலலிதா இன்று சென்னை வருகிறார் : ஜஸ்வந்த்சிங் சந்திக்கிறார்
முதலமைச்சர் ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் இருந்து இன்று (திங்கட்கிழமை) பகல் 2 மணிக்கு சென்னை வருகிறார். போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்-அமைச்சரின் இல்லத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் சந்தித்து தனக்கு ஆதரவு கோருகிறார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஜுன் மாதம் 21-ந் தேதி சென்னையில் இருந்து கோடநாடு சென்றார். வழிநெடுகிலும், விமான நிலையத்திலும், கோடநாட்டிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கோடநாட்டில் இருந்தபடியே முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசுப் பணிகளை கவனித்து வந்தார். ஜனாதிபதி தேர்தலையொட்டி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து ஜுன் 18-ந் தேதி சென்னை வந்தார். மறுநாள், சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓட்டுப் போட்டார். பின்னர், தலைமை செயலகத்தில் அரசுப் பணிகளைக் கவனித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அன்று பகல் மீண்டும் கோடநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை கவனித்து வந்தார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணியளவில் கோடநாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். வழிநெடுகிலும், விமான நிலையத்திலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.
இன்று பகல் 2 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்கு வருகிறார். அங்கு பகல் 3 மணிக்கு துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தனக்கு ஆதரவு கோருகிறார்.