தமிழகத்தை ஒரு வடிகாலாக நினைக்கின்றனர் : விஜயகாந்த்
தூத்துக்குடி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டியில் நேற்று மாலை நடைபெற்றது.
கட்சி தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
பின்னர் விஜயகாந்த் பேசியபோது, ‘’ஸ்ரீவைகுண்டம் பகுதி தாமிரபரணி ஆற்று தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு எடுத்து செல்கின்றனர். ஆனால் அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் தர மறுக்கப் படுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்து 6 மாதமாகியும் அத்தொகுதியில் எந்தவித திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது வீட்டிற்கு மாத வாடகை ரூ.3 ஆயிரம் என்றால் கரண்ட் பில் ரூ.3 ஆயிரம் கட்ட வேண்டியுள்ளது. தொடர் மின்தடை மற்றும் மின் கட்டண உயர்வால் விறகு அடுப்புகளை பயன்ப டுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் 77 பேர் ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி உதவித்தொகை பணத்தை சுருட்டி உள்ள னர். இவ்வாறு தவறு செய்த ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்து மோசடி பணத்தை திரும்ப பெற்று தண்டனை வழங்க வேண்டும்.
விலைவாசி உயர்வால் மக்கள் சிரமப்படுகின்றனர். சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விளாத்திகுளம் பகுதியில் தார் சாலைகளை காணாத கிராமங்கள் நிறைய உள்ளன. அதிமுக ஆட்சியில் தினமும் ஒவ்வொரு அறிக்கை விடப்படுகிறது. ஆனால் இதில் திட்டங்களை முறையாக நிறைவேற்றுகிறார்களா? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சியில் நடைபெற்றது போல் தற்போதும் மணல் கொள்ளை நடைபெற்றுவருகிறது. இதனை தடுத்து இயற்கை வளத்தை காப்பாற்ற தமிழகம் முழுவதும் மணல் அள்ளுவதற்கு நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும்.
வரும் பாராளுமன்ற தேர்தலை தமிழகத்தை ஒரு வடிகாலாக நினைக்கின்றனர். அதனால் அந்த தேர்தலில் மக்கள் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் வாக்களிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.