அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர் திடீர் மரணம்
கேரள மாநிலம் கொல்லம் வள்ளிக்காவில் உள்ள தனது ஆசிரமத்தில் கடந்த 1-ந் தேதி மாதா அமிர்தானந்தமயி பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்து எழுந்த பீகாரை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் சப்னம்சிங் மானே என்பவர் மாதா அமிர்தானந்தமயியை தாக்க பாய்ந்தார். இதையடுத்து சப்னம் சிங்கை பாதுகாவலர்களும், போலீசாரும் மடக்கி பிடித்தனர். அவரை கருணாகப்பள்ளி போலீசார் கைது செய்தனர். சப்னம் சிங் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு திருவனந்தபுரம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அங்கு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்ட அவர் ஜெயிலில் இருந்த மற்ற கைதிகளை தாக்கினார். அப்போது அவரும் காயம் அடைந்தார். இதையடுத்து திருவனந்தபுரம் பேரூர் கடையில் உள்ள மன நல காப்பக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் அறையிலேயே முடங்கி கிடந்தார். நேற்று கழிவறையில் விழுந்து கிடந்த அவரை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அமிர்தானந்தமயியை தாக்க முயன்றபோது சப்னம் சிங் மானேயை பிடித்தவர்களும், போலீசாரும் அவரை கடுமையாக தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு முறையாக சிகிச்சை எதுவும் அளிக்கப்படாததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.