மாணவியின் ஆடைகளை அகற்றி சோதனை செய்த ஆசிரியைகள் கைது
மேற்கு வங்கம், பிர்பும் மாவட்டம், காளிகாட்டி பகுதியில் ஸ்மிருதி நாரி சிக்ஷா நிகேதன் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 11ம் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரிடம் இருந்து 150 ரூபாய் நேற்று காணாமல் போனது.
இதுகுறித்து அம்மாணவி வகுப்பு ஆசிரியைகளிடம் புகார் செய்தார். இதையடுத்து, அம்மாணவிக்கு அருகே அமர்ந்திருந்த, மற்றொரு மாணவியை, பள்ளி ஆசிரியைகள் அழைத்துக் கொண்டு, ஆசிரியர்கள் தங்கும் அறைக்கு சென்றனர். அங்கு மாணவியின் ஆடைகளை அகற்றி, பணத்தை எங்காவது ஒளித்து வைத்துள்ளாளா என, பரிசோதித்தனர்.
அந்த மாணவி எவ்வளவோ மறுத்தும், அழுது முறையிட்டும், ஆசிரியைகள் விடவில்லை. ஆனால், மாணவியிடம் இருந்து பணம் ஏதும் கிடைக்கவில்லை. தான் அவமானப்பட்டது குறித்து வேதனை அடைந்த அம்மாணவி, அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்று, நடந்தவை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.
மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், பள்ளி ஆசிரியைகள் சைத்தாலி குப்தா மற்றும் லிப்பிகா சாகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் இருவரையும், போலீசார், உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.