நர்சு கற்பழிப்பு வழக்கு : டாக்டருக்கு ஆண்மை பரிசோதனை முடிந்தது
கேரள நர்சு கற்பழிப்பு வழக்கில் சரணடைந்த டாக்டர் அஜில்குமாருக்கு ஆண்மை பரிசோதனை முடிந்தது. இதையடுத்து விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
சென்னை முகப்பேரில், கேரளாவைச் சேர்ந்த ஜலினா (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை, நர்சு வேலைக்காக அழைத்து வந்த டாக்டர் அஜில்குமாரும், அவரது நண்பர் டாக்டர் சஜித்தும் கத்திமுனையில் கற்பழித்தனர். இது தொடர்பான வழக்கில் கைதான டாக்டர் சஜித்துக்கு ஏற்கனவே ஆண்மை பரிசோதனை முடிந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜலினாவுக்கும் ஏற்கனவே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது.
இந்த வழக்கில் கடந்த வாரம் நெல்லையில் சரணடைந்த மற்றொரு டாக்டரான அஜில்குமாருக்கு நேற்று ஆண்மை பரிசோதனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலை புழல் சிறையில் இருந்து டாக்டர் அஜில்குமாரை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.
அங்கு சம்பந்தப்பட்ட அரசு டாக்டர் மூலம் டாக்டர் அஜில்குமாருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த பரிசோதனை நடந்ததாக தெரிகிறது. பரிசோதனை முடிந்ததும் அவரை, போலீசார் நேராக புழல் சிறைக்கு மீண்டும் கொண்டு சென்றனர்.
மேலும் இந்த பரிசோதனை அறிக்கை கிடைத்ததும், அதை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கிடையில் போலீசார் இந்த வழக்கில், சாட்சிகளிடம் விசாரணை நடத்தி அதை பதிவு செய்து வருகின்றனர். இதனால் விரைவில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.