விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம தீ
விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் அருகே உள்ள ஏ.வி.எம். அவென்யூவில் 4 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வெங்கடேஷ் (தனியார் நிறுவன ஆடிட்டர்), சங்கர நாராயணன் (தனியார் நிறுவன நிர்வாகி), பொன்னுசாமி (கார் நிறுவன மேலாளர்), சிவராமன் (வங்கி மேலாளர்) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் கார் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று இரவு 2 மணிக்கு அடுக்குமாடியின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி. எந்திரம் ஒன்று திடீரென தீப்பிடித்தது. அப்போது ஏற்பட்ட தீப்பொறி கீழே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கின் மீது விழுந்து எரிந்தது.
மோட்டார் சைக்கிளில் பற்றிய தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும் மளமளவென பரவியது. அப்போது கீழ் தளத்தில் வசிக்கும் வெங்கடேசன் மனைவி ரம்யா கார்- மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே 3 வீடுகளுக்கும் ஓடிச்சென்று கீழ்தளத்தில் கார்-மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிவது பற்றி கூறினார்.
உடனே சிவராமன் வடபழனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பின்னர் கீழே ஓடிச்சென்று ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த தனது காரை வெளிப்புறமாக எடுத்து சென்றார். 3 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் பிடித்த தீயை அணைத்தனர்.
கீழ்தளத்தில் உள்ள வீட்டில் படுக்கை அறையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். வடபழனி உதவி கமிஷனர் சங்கரலிங்கம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருக்கலாம் என்று தெரிகிறது.
நள்ளிரவு நடந்த தீ விபத்தை ரம்யா கவனிக்காமல் இருந்திருந்தால் 4 வீடுகளிலும் வசித்த 20 பேர் உயிர் தப்பி இருக்க முடியாது. அடுக்குமாடி குடியிருப்பின் எதிரே ரேசன் கடை ஒன்று உள்ளது. அதில் ஒரு பேரல் மண்எண்ணை இருந்தது. கார்களில் பற்றிய தீ அங்கு பரவி இருந்தால் பெரிய அளவில் தீ விபத்து நடந்திருக்கும்.