லாரி மீது கார் மோதி விபத்து: 3 மாணவர்கள் பலி
வேலூரில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களான ஆந்திராவைச் சேர்ந்த மாருதி பிரசாத், தணு தத்தா ரெட்டி, குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்கிற கொலம்பி, மணிவண்ணன் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய 5 பேரும் விடுமுறை முடிந்து ஒரு காரில் கல்லூரிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களது கார் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி-சித்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே இன்று காலை 4 மணியளவில் ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது அந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் மாருதி பிரசாத், தணு தத்தா மற்றும் ராஜேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மணிவண்ணன் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மது அருந்திவிட்டு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காட்பாடி போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்